மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

மெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி?





இயக்குவதற்கு தேவையான தகமை

நிறைய மெகா சீரியல்கள் பார்த்திருக்க வேண்டும்.


*சுயமாக சிந்திக்கும் திறன் இருக்கவே இருக்க கூடாது.


*பத்து எபிசோட்டுக்கப்புறம் என்ன நடக்கும் என்பது ஆடியன்சை போலவே இயக்கம் உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடாது.


*நிறைய பொண்ணுங்களை ஒரே நேரத்தில் பிரச்சனை வராம ஹாண்டில் பண்ண தெரிஞ்சிருக்கணும் (ஷூட்டிங் ஸ்பொட்டில்).


கதை




கதை என்று இங்கு ஒன்றும் பெரிதாக சிந்திக்க தேவையில்லை; திரைக்கதையில் கூட ஒன்றும் புரட்டிப்போடவோ நிமித்திப்போடவோ வேண்டாம்; ஒரு அட்டவணை தயாரித்தால் போதும். உதாரணமாக சொல்வதென்றால் இரண்டு குடும்பம்; அதில் முதல் குடும்பத்தில் அம்மா, அப்பா, இரண்டு பையன், நான்கு பொண்ணு, மாமியார் அப்புறம் ஒரு வேலைக்காரன். இரண்டாவது குடும்பத்தில் அம்மா, (அப்பா இல்லை), மூணு பொண்ணுங்க, ஒரு பாட்டி. இதில் எது நம்ம ஹீரோயின் வீட்டு குடும்பமின்னு இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும்; யெஸ், இரண்டாவது குடும்பம்தான் நம்ம ஹீரோயின் வீட்டு குடும்பம். அந்த மூணு பொண்ணுங்கள்ள முதல் பொண்ணுதான் ஹீரோயின்.





நம்ம ஹீரோயின் குடும்பம் எவளவுக்கெவளவு வறுமையில் வாடுதோ, அதே நேரம் மற்றைய குடும்பம் செல்வக்கொளிப்பா இருக்கணும். செல்வந்த குடும்பத்தில் இருக்கின்ற அம்மா கேரக்டரோட சேர்த்து நாலு பேரு கெட்டவங்க; மிகுதி நான்கு பேரில் இரண்டு பேரு சும்மா உல்லுல்லாய்க்கு, மிகுதி இரண்டும் ரொம்ப நல்லவங்க!!!! ஹீரோயின் வீட்டில் எல்லோருமே நல்லவங்க, ஆனாலும் அப்பப்ப ஹீரோயினை வீட்டில உள்ள எல்லோருமே புரிஞ்சிக்காத மாதிரி சீன் எடுக்கணும் என்பதால் கொஞ்சம் அவிங்கள சுயநலகாரர்களா அப்பப்ப காட்ட வேண்டி வரும்; இவற்றைவிட ஹீரோயின் குடும்பத்தில் உள்ள கடைசிப் பொண்ணை ரொம்ப வாயாடியா, குறும்புகாரியா , வெகுளியா காட்டனும்; ஏன்னா நம்மகிட்ட சரக்கு கம்மியாகிட்டா அந்த வெகுளிப் பொண்ணை மம்மி ஆக்கி ஒரு ஆறு மாசத்தை ஓட்டிடலாம்.


திரைக்கதை




இப்ப நீங்க திரைக்கதையை பின்ன ஆரம்பிக்கிறீங்க; இந்த இரண்டு குடும்பங்களுக்குள்ளேயும் ஏதாவதொரு போராட்டம் என்று திரைக்கதையை நகர்த்தலாம்; அது பாசமோ, பழிவாங்கலோ, பகையோ, ஈகோவோ எதுவா வேணுமின்னாலும் இருக்கலாம். இதையே வச்சு ஒரு மூணு மாசமா கதையை ஆமை வேகத்தில் நகர்த்தலாம். அந்த காலப்பகுதியில் இந்த இரண்டு குடும்பத்தை இருபதாக்கணும்; அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் ஜோடி பிடிக்கணும், அந்த ஜோடிகளுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கணும், அந்த குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் உள்ளமாதிரி பண்ணனும், அப்புறம் அந்த அந்த பிள்ளைகளுக்கு ஜோடிகள் தேடனும், அதுக்கப்புறம் அந்த ஜோடிகளுக்கு குடும்பம் அமைக்கணும்; இப்பிடியே இரண்டு வருடத்தில் குறைந்தது நாற்பது குடும்பம் சேர்த்தாகனும்.


இப்ப திரைக்கதைக்கு என்ன கவலை!!! ஒரு ஹீரோயின், நாற்பது குடும்பம், இருநூறு கேரக்டர்; அடுத்த பத்து வருடத்திற்கு சீரியலை இழுக்க இது போதாதா? ஜவ்வுமாதிரி இழுத்தா இருபது வருசத்திர்க்கும் இழுக்கலாம். ஒரு கட்டத்தில நீங்களா சீரியலை முடிக்கலாமென்று பிளான் பண்ணினால்கூட பாதி கதையை முடிக்கவே ஒரு ஆறுமாசம் தேவைப்படும். தொடங்கின இடம் மறந்து போயிருக்கும். ஆனால் நீங்க ஒன்னும் சிரமப்பட தேவையில்லை கிளைக் கதைகளை அம்போன்னு விட்டுவிட்டு, ஹீரோயினுக்கு 'சுபம்' என்று முடித்தால் போதும், பாக்கிறவங்க புல்லரிச்சு போயிடுவாங்க!!!!





இதில் உங்களுக்கு சில சிக்கல்கள் வரலாம், அதாவது யாராவதொரு நடிக/நடிகை திடீரென்று சீரியலை விட்டு விலகிவிடும் சந்தர்ப்பம் ஏற்ப்படுவதுண்டு. முன்பெல்லாம் அந்த கேரக்டரை சாகடித்து அவரின் புகைப்படத்திற்கு மாலை போடுவார்கள்; இப்போதெல்லாம் "இவருக்கு பதில் இவர்" என்று போட்டு இன்னொருவரை அறிமுகம் செய்யும் புதிய முறைதான் என்பதால் நோ டென்ஷன். அதேநேரம் அதே சீரியலிலேயே நீண்ட நாட்களுக்கு முன்னர் ஒருசில காட்சிகளில் சின்ன கேரக்டர் பண்ணின ஒருத்தரை மறந்துபோயும் "இவருக்கு பதில் இவர்" கேரக்டர்ல போட்டு மாட்டிக்க கூடாது.


அப்புறம் நீங்க செல்வியா அறிமுகப்படுத்திய உங்க ஹீரோயின் நிஜ வாழ்க்கையில் திருமதியாகி அம்மாவாகினா ஒரு நாலுமாசம் ஷூட்டிங் தடைப்படும். அந்த காலகட்டத்தில ஹீரோயின் வெளிநாட்டில பிஸ்னஸ் கொன்பிரென்ஸில் இருப்பதாக சொல்லி அவங்க தக்கச்சியை அந்த நாலு மாசமும் ஹீரோயினா மாத்திட்டா சீரியல் தடங்கள் இல்லாமல் சமத்தா போகும்.


வசனம்




*பாக்கிற ஒவ்வொரு குடும்ப பெண்களும் "இவள் நாசமாபோக" என்று திட்டுமளவிற்கு வில்லி கேரக்டர் பேசும் வசனங்கள் அத்தனையும் செதுக்கப்பட்டிருக்கணும்.


*பாக்கிறவங்க ஒவ்வொருத்தரும் "பாவம் இவள்(நம்ம ஹீரோயின் பெயர்) எவளவு கஷ்டம் வந்தாலும் பொறுப்பா, பொறுமையா பேசிறாள் பாருங்க" என்று சொல்லுமளவிற்கு ஹீரோயின் வசனத்தில் தேனும், பாலும் நிரம்பி வழியனும்.


*அப்பப்போ ஹீரோயின் பக்கத்தில நிக்கிற நல்ல கேரக்டர் ஒண்ணு "இவளுக்குத்தான் எவளவு கஷ்டம்!!, ஆண்டவா உனக்கு கருணையே இல்லையா?" என்கிற வசனத்தை வாரம் ஒரு தடவை பேசணும்.


*வில்லி கேரக்டர் " நான் உன்னை சும்மா விடமாட்டேன், போகப்போக பாரு நான் யாரின்னு காட்டிறன், என்னை பற்றி உனக்கு சரியா தெரியாது, உன் குடும்பத்தையே அழிக்காம விடமாட்டன், நான் ஒருநாளும் நினைச்சதை முடிக்காம விட்டதில்லை, உங்களுக்கொன்னும் புரியாது நீங்க பேசாம சும்மா இருங்க " போன்ற தேய்ந்துபோன வசனங்களை தினமொரு தடவையேனும் பயன்படுத்தவேண்டும்.


*ஹீரோயின் கேரக்டர் "அவங்க பாவம்,வேனுமின்னேயா செய்தாங்க, எங்களுக்கும் காலம் வரும், உனக்கு நான் இருக்கிறேன், நீதி, நீர்மை, நியாயம், மனசாட்சி, கடவுள், போராட்டம்" என்று வசனங்களை அள்ளிவுடனும்.


*முக்கியமா வில்லியோட புருஷரு "ஏன் இப்படி எல்லாம் பண்ணிறாய்?, நீ திருந்தவே மாட்டியா, எக்கேடென்டாலும் கெட்டுப்போ, ஆண்டவா இவளுக்கு நல்ல புத்தியை குடு, என்ன பாவம் செய்தானோ இவளுக்கு புருஷனா வந்து மாட்டிகிட்டன் " போன்ற வசனங்களை அப்பப்போ பேசலாம்.


*அப்புறம் மத்த மத்த கேரக்டர்கள் தேவைக்கு ஏற்ப வேண்டியபடி வசனம் பேசிக்கலாம், அதுக்கெல்லாம் ஒன்னும் ஸ்பெஷலா யாரும் மண்டையை போட்டு உடைக்க தேவையில்லை.


டைரக்ஷன் (இயக்கம்)







*இதில் பெரிதாக ஒன்றும் மினக்கெட தேவையில்லை; ஒவ்வொரு வெள்ளியும் எதிர்பார்ப்பை எகிறவைக்கிற மாதிரி Week End ப்ளாக் வைக்கணும். திரைக்கதை பிரகாரம் Week End ப்ளாக் சரியா அமையலைன்னாலும் அட்லீஸ்ட் கனவு காட்சியை வைத்தேன்றாலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கணும். திங்கக்கிழமை காட்சிகளில் Week End ப்ளாக்கிற்கு சம்பந்தமே இல்லாத காட்சிகளை எடுத்தாற்கூட நம்ம ஜனங்க ஏற்ருக்கொள்ளுவாங்க, அவங்கதான் ரொம்ப அப்பாவியாச்சே!!!


*அப்புறம் 100 எபிசோட்டுக்கு ஒருக்கா கொஞ்சம் பெரிய சீனியர் ஆட்டிச்டா சிபிஐ, போலிஸ் கேரக்டரின்னு இன்ரடியூஸ் பண்ணி மக்களை கன்பியூஸ் பண்ண வைக்கணும். முக்கியமா அவங்களுக்கு குடுக்கிற BGM சும்மா வேட்டையாடு விளையாடு ராகவனுக்கு கொடுத்ததை மிஞ்சணும்


* திடீறென்று ஒருநாள் "இன்று எடுக்கப்படும் தொடர் ஒரே தடவையில் எடுக்கப்பட்டது, விளம்பரமில்லாமல் ஒளிபரப்பாக போகிறது" என விளம்பரம் பண்ணி மக்களை வியப்பில் ஆழ்த்தணும்.


* ஒரு நல்லவன்(ள்) கேரக்டரை 200 எபிசோட்டுக்கப்புறம் கெட்டவனா(ளா)கவும், அதே கேரக்டரை அடுத்த 200 எபிசோட்டுக்கப்புறம் திரும்பவும் நல்லவனா(ளா)கவும் காட்டலாம், தேவைப்பட்டால் மீண்டும் கெட்டவனா(ளா)க்கலாம். இந்த முறையை ஒரு கேரக்டருக்குத்தான் செய்ய வேண்டுமென்றல்ல, நான்கைந்து கேரக்டர்களுக்கு செய்தால் இன்னுமொரு 500 எபிசோட்டை கரையேற்ரலாம் .


* சினிமாவில் தண்ணி, தம் அடித்தால்த்தான் ராமதாஸ் அங்கிள் சத்தம் போடுவாரு, இங்கெல்லாம் தண்ணி, தம் அடிக்கும் போது கீழே "குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு" என்று வாசகம் எழுதினால் சரி.


* முக்கியமாக ஒரு விடயத்தை ஞாபகத்தில வச்சிருக்கணும்; அதாவது ஒருபோதும் 500 எபிசோட் வரும்வரைக்கும் கதாநாயகியை(ஹீரோயினியை) கஷ்டப் படுறகேரக்டராவே காட்டனும்; அப்புறம் அவங்க நல்லா வந்த பிற்பாடு அவங்களை அடுத்தவங்களுக்கு தாராளமா உதவி செய்றவங்களா காட்டனும்; அவங்க கிட்ட உதவி பெற்றவங்க பின்னர் ஒரு நாளில் நன்றி மறக்கிற கேரக்டர்களா இருக்கிற மாதிரி கதையை பார்த்து பார்த்து செதுக்கணும்.


* இறுதியாக, எல்லா பண்டிகைக்கும் ஹீரோயின், வில்லி நடிகைகள் உட்பட அனைவரையும் தொலைக்காட்சி கலையகத்திற்கு வரவழைத்து கலகலப்பாக பண்டிகையை கொண்டாடனும் (அப்பத்தான் நம்ம மக்கள் "அங்கபாரு நம்ம ஹீரோயினியும் அந்த வில்லியும் எப்பிடி பிரெண்டா இருக்கிறாங்க " என்று பேசிக்குவாங்க)





இப்போது சூடான மெகா சீரியல் ரெடி; அடுத்த பத்து வருசத்துக்கு இயக்குனருக்கு நிரந்தர வேலை, ஆட்சி மாற்றம் கூட அவரை ஒன்னும் பண்ணாது. அடடா.... கடைசியா சீரியலுக்கு ஒரு டைட்டில் தேவையே; அதிலொன்றும் சிரமமில்லை; ஒரு பொண்ணோட பெயரையோ அல்லது கல்யாணவீட்டில் பாக்கிற ஏதாவதொரு பொருளோட பெயரையோ வச்சிக்கலாம், உதாரணமா பாக்கு, வெத்திலை, சுண்ணாம்பு, மணவறை, சீப்பு, சோப்பு..............

வாழ்க மெகா சீரியல்கள், வளர்க ...... (நல்லா வாயில வருது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக