மொத்தப் பக்கக்காட்சிகள்

7/14/2012

காமராஜர்

காமராஜர் , தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர் , தன்னலமில்லாத அரசியல்வாதி , பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் . காமராஜர் கல்விக்கண்ணை மட்டும் திறக்கவில்லை , விவசாயத்திற்காக, வைகை அணை,மணிமுத்தாறு ,சாத்தனூர் உட்பட நிறைய அணைகள் கட்டினார் . தொழில்த்துறைக்காக, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை , ஆவடி ராணுவ டாங்கி தொழிற்சாலை , நெய்வேலி நிலக்கரி சுரங்கம் , திருச்சி பெல்(BHEL) தொழிற்சாலை உட்பட பல தொழிற்சாலைகள் அமைத்தார் . தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர் . இவரது 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை இதுவரை யாராலும் நெருங்க முடியவில்லை . MGR கொஞ்சம் நெருங்க முயற்சித்தார் அவ்வளவுதான் , மற்றவர்கள் முயற்சி கூட செய்யவில்லை .

1953 ஆம் ஆண்டு முலமைச்சராக பதவி வகித்த இராசாசி குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்தியதால் ,பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. ராஜாஜி தானே பதவி விலக முன் வந்ததோடு தனக்குப் பதில் சி. சுப்பிரமணியத்தை முன்மொழிந்தார். எம்.பக்கதவத்சலம் வழிமொழிந்தார். ஆனால் காங்கிரசுக் கட்சி சட்ட மன்றத் தலைவராக காமராசர் அவர்களே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சி.சுப்பிரமணியத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாத காமராசர் முதலமைச்சராக பொறுப் பேற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட எம்.பக்தவச லத்தையும் அமைச் சராக் கினார். அதோடு தி.மு.க ஆதரவில் போட்டியி"ட்டு வெற்றி பெற்ற இராமசாமி படையாட்சியையும், மாணிக்க வேலு நாயக் கரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை எதிரிகளாகவே கருதக் கூடாது. அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடைய தலைவர் ஒருவரைக் கூட நாம் இன்று காண முடியாது. தன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறாரா? அவர் என்னுடைய பரம விரோதி. அவரைத் தொலைத்துவிடாமல் வேறு என்ன வேலை எனக்கு என்று, வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு ஒரு கட்சியில் பல பிரிவுகள் வலம் வருவதை நாம் பார்க்கிறோம்.

காமராசர் முதலமைச்சராக இருந்த போது அவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராசரிடம் தெரிவித்தர். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள்
அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும். என்ற கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராசரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். "நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடா போன்வற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராசர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன் அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையே சிக்கனமாகச் செலவு செய்துக்கொள் என்று இந்தக்கோரிகையையும் நிராகரித்தார்.
காமராசர் தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர், தன்னலமில்லாத அரசியல்வாதி, பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வாழ்ந்து காட்டியவர்.

தனக்கென ஒரு குடும்பம் வேண்டாம், சொத்தும் வேண்டாம், உறவு வேண்டாம் ஏன் பெற்றத் தாயின் அரவணைப்பும் வேண்டாம் எனப் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவர் காமராசர்.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் மாலை காமராசர் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். அவர் இறந்த போது அவருடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா? பத்து கதர் சட்டை, வேட்டி, ரூ.100 இவ்வளவு தான், வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்த தன்னகரில்லாத தலைவர் காமராசர். 

அவரது பேச்சில்அடுக்குமொழி இல்லை.. எதுகை மோனை இல்லை.. உண்மை மட்டுமே இயல்பாய் இருந்தது.

காமராசர் மூன்று முறை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1954–57, 1957–62, 1962–63) .. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலைத் தவிர்க்க காமராசர் சொன்ன யோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.அதாவது , மூத்தவர்கள் இளையவர்களுக்கு வழி விட வேண்டும். இதனை சொன்ன காமராசர், சொன்னதோடு மட்டுமல்லாமல் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டுக் கட்சிப் பணியாற்றச் சென்றார்...

இப்படியொரு தலைவர் வாழ்ந்ததற்கான சுவடு கூட இல்லாமல்போய் விட்டது இன்றைய அரசியல். . .

குறைகள் சிற்சில இருந்தாலும் ,குணத்தில் இவர்போல யாருமில்லை
கறையே இல்லா நிலவில்லை,  காமராசர்க்கு யாரும் நிகரில்லை..