மொத்தப் பக்கக்காட்சிகள்

2/25/2014

தமிழ் மொழியின் தினசரி நாளேடுகள் :



நமது தமிழ் மொழியில் வெளியான முதல் செய்தி பத்திரிக்கை சுதேசமித்ரன் என்ற பத்திரிகையாகும்.இது 1882 ஆம் ஆண்டு திரு.ஜி.சுப்ரமணிஅய்யரால் துவங்கபட்டது 1904ல் பாரதியார் அவ்ர்கள் இந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார் நாவல்களில் சிறந்த நாவல் என்று கூறப்படும் திரு.ஜானகிராமன் அவர்களின் நாவலான மோகமுள் இந்த பத்திரிகையில்தான் தொடராக வெளிவந்தது 1962ல் திரு.ஜி.சுப்ரமணிஅய்யரின் மறைவுக்குபின் வழிநடத்த முடியாத காரணத்தால் 1970ல் இந்த பத்திரிகை மூடபட்டது

1.தினத்தந்தி-1942ல் திரு.சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது.


2.தினமணி-1934ல் திரு.t.sசொக்கலிங்கம் அவர்களுடன் தொடங்கப்பட்டது
new indian expressஆல் வழிநடத்தபடுகிறது

3.தினமலர்-1951ல் திரு.டி.வி.ராமசுப்பய்யரால் தொடங்கப்பட்டது

4.தினகரன்-கே. பி. கந்தசாமி அவ்ர்களால் தொடங்கபட்டு வழிநடத்த முடியாத காரணத்தால் 2005 முதல் திரு.கலாநிதி மாறன் அவர்களால் வழி நடத்தபடுகிறது

5.தினபூமி-1990 களின் பிற்பகுதியில் வெளியாகத் தொடங்கியது

6.தீக்கதிர்-மதுரையில் இருந்து வெளிவரும் செய்திதாள்

7.முரசொலி-1942ல் முன்னாள் முதல்வர் திரு.கலைஞர்.கருணாநிதி அவ்ர்களால் தொடங்கபட்டது

8.நமது எம்ஜிஆர்-முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கபட்டது

9.விடுதலை-தந்தை பெரியார் அவர்களால் தொடங்கபட்டது

10.தமிழ்சுடர்-திரு.உஸ்மான் பயாஸ் அவர்களால் தொடங்கபட்டது

11.தினசுடர்-1963ல் தொடங்கபட்டது கர்நாடகாவிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிக்கை

12.மாலைமலர்-1977 திரு.சி.பா.ஆதித்தனாரால் கோவையில் தொடங்கபட்டது ஒரு மாலை நாளிதழ்

13.மாலைமுரசு-

14.தமிழ்முரசு-2005 திரு.கலாநிதி மாறன் அவர்களால் தொடங்கபட்டது ஒரு மாலை நாளிதழ்

15.மாலைசுடர்-

16.தினகரன்-1932ல் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள் லேக்ஹவுஸ் நிறுவனம் வழி நடத்துகிறது

17.தினகுரல்-இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள் வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் தொடங்கபட்டது

18.வீரகேசரி-1930ல் திரு.சுப்ரமணி செட்டியாரால் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

19.உதயன்-1985ல் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

20.விடிவெள்ளி-இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

21.காலைகதிர்-பிரித்தானியா(uk)விலிருந்து வெளியாகும் தமிழ் செய்திதாள்

22.மக்கள் ஓசை-1981 மலேசியாவில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

23.மலேசியநண்பன்-மலேசியாவில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

23.தமிழ்நேசன்-1924ல் தொடங்கபட்டது

24.ஈழமுரசு-பிரான்சில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

25.மக்கள்குரல்-1973 திரு.சண்முகவேல் அவ்ர்களால் தொடங்கபட்டது

26.தமிழ்முரசு-சிங்கபூரில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

எனக்கு தெரிந்த நாளிதழ்களை மட்டும் தெரிவித்துள்ளேன் இன்னும் நமது தாய் மொழியான தமிழ் நாளிதழ்களை பற்றி உங்களுக்கு தெரிந்தால் குறிப்பிடுங்களேன்

இடுகையிட்டது prakash sona நேரம் 6:00 AM

இவற்றில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். மாறுதல்களும், புதியனவும் 

வரவேற்கப்படுகின்றன.

2/24/2014

சென்னை கொழும்பு 'இந்தோ- சிலோன் எக்ஸ்பிரஸ்' 100 ஆண்டு ரயில் சேவை பிப்ரவரி 24 - 1914

கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக, கடல் கடந்து செல்வது, தமிழர்களுக்கு புதிதல்ல. 'திரை கடல் ஓடி, திரவியம் தேடு...' என்ற பாடல் நமக்கு ஓராயிரம் நினைவுகளை தரும். அந்த வகையில், சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன், ரயில் வசதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல வகையிலும், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நல்ல தொடர்பு இருந்த காலம் அது.

இன்றைய காலகட்டத்தில், நதி நீர் பிரச்னை உட்பட, பல்வேறு விஷயங்களுக்காக, அண்டை மாநிலங்களுடன், தமிழகத்திற்கு எப்போதும் சச்சரவு தான் இருந்து வருகிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன், இரு நாடுகளுக்கு இடையே ரயில் மூலம் போக்குவரத்து தொடர்பு இருந்தது என்றால், அது வியப்புக்குரிய விஷயமே. ஒரு வலுவான மைய அரசு இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இந்தியாவும், இலங்கையும், ஒரே நிர்வாகத்தின் கீழ் தான் இருந்தது. 'போட் மெயில்' என்று அழைக்கப்பட்ட ஒரு ரயில் தான், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய இணைப்பாக இருந்துள்ளது. சென்னை - கொழும்பு இடையே போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்த, ரயில் பாதை அமைக்க, 1876ல் திட்டம் தீட்டப்பட்டது.

பாம்பன் பாலம்:

கடந்த, 1911ல், 2.3 கி.மீ., தூரமுள்ள, மண்டபம் - பாம்பன் பகுதிகளை, கடல் நடுவே, ரயில் பாலம் மூலம், இணைக்கும் பணி துவங்கியது. பாலத்தின் கட்டுமான பணிக்காக, 2,600 டன் இரும்பு; 80 ஆயிரம், கல் பாறைகள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம், 143 தூண்கள் அமைக்கப்பட்டு, 1913ல், பாம்பன் பாலப் பணி நிறைவடைந்தது.

கடந்த,1914, பிப்ரவரி, 24ம் தேதி, முதல், 'போட் மெயில்' ரயில் சேவை துவங்கியது. தற்போது, நூறு ஆண்டுகளை தொட்டுள்ளது. வரும், பிப்., 24ம் தேதியுடன், இந்த போக்குவரத்து தொடர்புக்கு நூறு ஆண்டுகளாகிறது. இதை வாசகர்களுக்கு நினைவுப்படுத்துவதே, இந்த கட்டுரையின் நோக்கம். சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம்; தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை, 36 கி.மீ., தூரத்திற்கு கப்பல் பயணம்; தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம் என்று இந்த போக்குவரத்து தொடர்பு இருந்துள்ளது. சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, 'போட் மெயில்' ரயில், தனுஷ்கோடி துறைமுகத்தை சென்றடையும். அங்கிருந்து, கப்பல் மூலம், பயணிகள், தலைமன்னார் அழைத்து செல்லப்படுவர். பின், மீண்டும், ரயிலில் பயணித்து, கொழும்புவை சென்றடைவர். இந்த பயணத்திற்கு பாஸ்போர்ட் அவசியம் இல்லை. நோய் தொற்றுக்கான தடுப்பூசி போட்டிருந்தால் போதும்; டிக்கெட் வாங்கி, ரயிலில் ஏறி, சுகமாக பயணிக்கலாம்.

தனுஷ்கோடி:

இந்தியா - இலங்கை இடையே, பல ஆண்டுகளாக, வர்த்தகம் நடப்பதற்கு, தனுஷ்கோடி முக்கிய துறைமுகம் விளங்கியது. 1964 டிசம்பர், 24ம் தேதி, தாக்கிய புயல், ஒரே நாள் இரவில், தனுஷ்கோடியை அழித்தது. இதில், 1,800 பேர், இறந்தனர். இதன் பிறகு, தனுஷ்கோடி வரை இயக்கப்பட்ட, 'போட்மெயில்' ரயில், இப்புயலுக்கு பின், ராமேஸ்வரத்துடன் நிறுத்தப்பட்டது. இந்தியா - இலங்கை கடல்வழி ரயில் பயணமும், அன்றோடு முடிவுக்கு வந்தது. 'நூறு ஆண்டுகளை தொடும், 'போட் மெயில்' ரயில் குறித்து, தகவல் தாருங்கள்' என, 'தினமலர்' நாளிதழில், அறிவிப்பு வெளியான உடனே, நூற்றுக்கணக்கான, போன் அழைப்புகள், ஏராளமான கடிதங்கள் குவிந்து விட்டன. தள்ளாத வயதில், நடுங்கும் குரலில், வாசகர்கள் தெரிவித்த தகவல்கள் ஏராளம். 'போட் மெயில்' என்ற பெயர் மட்டும் அல்லாமல், 'இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ், வெட்டிச் செல்லும் ரயில்; ஒட்டிக் கொள்ளும் ரயில்' என்றெல்லாம், அந்த கால மக்கள் இந்த ரயிலை பெயரிட்டு அழைத்துள்ளனர். ரயிலில் பயணம் செய்த பிறகு, மூன்று சோப்பு கட்டிகள் தீரும் அளவுக்கு, குளிக்க வேண்டும்; பேரளம் ஸ்டேஷனில் விற்கும் வடையை பங்கு போட வரும் காக்கைகள்; ரயிலை பார்த்து, நேரத்தை குறித்துக் கொள்ளும் போக்கு; சுற்றுலாவுக்கு செல்வது போல, ரயிலை பார்க்க சென்ற மக்கள் கூட்டம் என, வாசகர்கள் அளித்த அரிய தகவல்களை கூறிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு, அந்த கால மக்களுடன், 'போட் மெயில்' ரயில் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது.


மூன்றாம் வகுப்பு கட்டணம் 14 ரூபாய்:

1947 ரயில்வே கால அட்டவணையை, பொக்கிஷமாக பாதுகாத்து வரும், கொங்கு மண்டல ஆய்வு மைய அமைப்பாளர், ரவி: சென்னை முதல், தலைமன்னார் வரையிலான, போக்குவரத்து, தென்னிந்திய ரயில்வே கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த சேவையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளில் மட்டுமே, இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதல் வகுப்பில், ஆங்கிலேயர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள் மட்டுமே செல்ல முடியும். சோப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், இலங்கையில் இருந்து, அதிகளவு, தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சென்னை - கொழும்பு ரயில் சேவைக்கு, மூன்றாம் வகுப்பு, கட்டணம், 14 ரூபாய் 15 பைசா.

சிங்களப் பெண் காட்டிய பாசம்:

கவிஞர் தென்றல் ராமலிங்கம், சென்னை சேத்துபட்டு: என் மாமனார், இலங்கையில், தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்தார். நான், மத்திய அரசு ஊழியர் என்பதால், பாஸ்போர்ட், விசா எளிதாக கிடைத்தது. 1960ல், நான், என் மனைவி, மகன் மூவரும்,'போட் மெயில்' மூலம், தலைமன்னாரில் இறங்கி, ரயிலில், கொழும்பிற்கு சென்றோம். பின், பஸ் ஏறி, ரட்னபுரிக்கு சென்றோம். தேயிலை தொழிலாளருக்காகவும், நடைபாதைக் காரர்களுக்காகவும், நடுக்காட்டில், 40 வயது சிங்கள பெண், டீக்கடை வைத்திருந்தாள். என், மகனுக்கு அப்போது, நான்கு வயது. டீ சாப்பிட்டோம்.'பொடியன் எனக்கு மிச்சம் பிடிச்சுருக்கு. அவன் சாப்பிட்ட பன்னுக்கும், தேத்தண்ணீருக்கும் சல்லி வேணாம்' என, அவனை தூக்கி கொஞ்சினாள். அன்று, அந்த சிங்கள பெண்ணின் பாசத்தையும், இன்று, மனிதநேயமற்ற ராஜபக்?ஷேவையும் நினைத்த பொழுது மனம் அழுதது.

கட்டணம் ரூ.45 தான்!

மதுரையை சேர்ந்த என்.ஏ.என். நாராயணன், 80: என்,சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், கல்லல். என் தந்தை, கொழும்பில் வியாபாரம் செய்து வந்தார். சிறு வயதில், நான் சில குறும்புகள் செய்ததால், என்னை கொழும்புக்கு அனுப்பி, படிக்க வைத்தனர். 'போட் மெயில்' ரயிலில், என் முதல் பயணம், 1946ல் நிகழ்ந்தது. ரயில் பாம்பன் பாலத்திற்கு வந்ததும், 'விசில் சிக்னல்' கொடுக்கப்பட்டு, மெதுவாக நகரும். அப்போது கடலின் அழகையும், வளைந்து செல்லும் ரயிலின் பின் பகுதியையும் பார்த்து ரசித்தபடி தனுஷ்கோடி சென்று சேர்வோம். அங்கு கப்பல் கேப்டன் எங்களை வரவேற்க தயாராக இருப்பார். பழங்கள், காய்கறிகள் எடுத்து செல்ல அனுமதியில்லை. அங்கிருந்து கப்பல், தலைமன்னார் நோக்கி பயணிக்க துவங்கும். மாணவர்களுக்கு முதல் வகுப்பு கொடுப்பர். அந்த குட்டி கப்பலில், 400 பேர் பயணிக்கலாம். கடல் பயணம், மொத்தம், 22 மைல். நடுக்கடலில் கப்பலை நிறுத்தி, இந்தியா - இலங்கை கடல் பகுதிகள் சங்கமிக்கும் இடத்தை, கேப்டன் சுட்டிக் காட்டுவார். தலைமன்னாரில் இறங்கிய பின், மீண்டும் ரயிலில் ஏறி, கொழும்பு செல்ல வேண்டும். அன்றைய காலத்தில், கல்லலில் இருந்து கொழும்புவிற்கு ஒரே டிக்கெட்டாக செல்ல, 45 ரூபாய் தான் கட்டணம். பிளஸ் 2 வரை கொழும்பில் படித்து முடித்து, அங்குள்ள தேயிலை தோட்டத்தில் மேலாளராக பணியாற்றினேன். அதற்கு பின் இந்தியா வந்து விட்டேன்.

நீங்கா துயரம் தந்த ரயில்:

இந்த ரயிலை, 'இந்தோ- சிலோன் எக்ஸ்பிரஸ்' என்றே அழைப்பர். அந்த ரயிலின் எண் 1. அது தனுஷ்கோடியில் இருந்து எண் 2 ஆக திரும்பும். கடந்த,1964ல் சென்னையில் வசித்தேன். என் மனைவி கர்ப்பமுற்றிருந்தார். குடும்பத்துடன் ராமேஸ்வரம் செல்ல தீர்மானித்தோம். 'போட் மெயில்' ரயிலில் தனுஷ்கோடி வரை பயணித்தோம். நாங்கள் சென்று வந்த அடுத்த மாதம் வீசிய புயலில், தனுஷ்கோடியே அழிந்து போனது. அன்று சென்ற, 'போட் மெயில்' ரயிலும் மாயமானது; பலர் உயிரிழந்தனர். இந்த செய்தி கேட்டதும் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இன்று வரை அந்த துயரச் செய்தி, என் மனதை விட்டு நீங்காமல் உள்ளது.

கொழும்பில் இருந்து வந்த வெங்காயம்:

தனுஷ்கோடியில், 1958ல், ரயில்வே பணியில் சேர்ந்தேன். அடிப்படை சம்பளம், 35 ரூபாய். 1989ல் விருப்ப ஓய்வு பெற்றேன். தனுஷ்கோடியில் இருந்து, தலைமன்னார் துறைமுகத்திற்கு, 18 கி.மீ., தூரம் கப்பலில் சென்றது. இதற்காக 'இர்வின், கோஷன்' என்ற இரு கப்பல்கள் இருந்தன. ஒன்று இயக்கப்படும்; மற்றொன்று 'ஸ்பேர்' ஆக இருந்தது. இக்கப்பல்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு செல்வதால், 'போட் மெயில்' என்று பெயரிடப்பட்டது. இங்கிருந்து கொழும்பு சென்றவர்கள், சீலா மீன் கருவாடு, துணிகள் கொண்டு சென்றனர். அங்கிருந்து திரும்பும் போது, புகையிலை பொருட்கள், துணிகள், பால் பாயின்ட் பேனாக்கள், வெங்காயம் ஆகியவற்றை எடுத்து வந்தனர்.

எஸ்.கே.சேது, 77, 'போட் மெயில்' ரயில் டிரைவர், மண்டபம் மீனவர் காலனி

எங்கள் ஊருக்கு ரயில் தான் கடிகாரம்:

ரயில்வே துறையில் தந்தை பணியாற்றியதால், சிறு வயதிலேயே பல இடங்களுக்கு ரயிலில் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ' போட் மெயில்' ரயில், எங்கள் ஊர் வழியாக கடந்து செல்லும். அப்படி கடந்து செல்லும்போதெல்லாம், ஊர்க்காரர்கள் அந்த ரயிலை பற்றி பெருமையாக கூறுவர். என் தந்தை, இலவச பாஸ் மூலம், திருச்சிலிருந்து, 'போட் மெயில்' ரயிலில் அழைத்து சென்றார். எங்கள் ஊருக்கு ரயில் தான் கடிகாரம். ரயில் திருச்சியை தொடும் சத்தத்தை கேட்டதும், 'இரவு, 8:00 மணி ஆகிவிட்டது' என, அனைவரும் சரியாக கூறி விடுவர். என், 10வது வயதில், 'போட் மெயில்' ரயலில் பயணித்தேன். நூற்றாண்டு கண்ட ரயில் சேவையில், நானும் பயணித்து இருக்கிறேன் என, நினைக்கும்போது பெருமையாக உள்ளது.

நரசிம்மன், 88, 'போட் மெயில்' ரயிலில் பயணித்தவர், குறிஞ்சி நகர், புதுச்சேரி,

துறவிகள் பெட்டி:

நான், சென்னை கேரஜ் ஒர்க்ஸ் ரயில்வே பணிமனையில், வேலை செய்து ஓய்வு பெற்றவன். 1956ல் ரயில்வே பணியில் சேர்ந்தேன். 1961 ஜூன் மாதம், இலங்கை சென்று வந்தேன். ரயில்வே பணியில் இருந்ததால், இலங்கை சென்று வர, இலவசமாக பாஸ் கொடுத்தனர். பாஸ்போர்ட், விசா எடுத்து, சென்று வர வேண்டும். சென்னையில் இருந்து, தலைமன்னார் கடற்கரை வரை, ஒரு 'பாஸ்' - தலைமன்னார் கடற்கரையில் இருந்து, மாத்ரா (கொழும்பில் இருந்து, 100 மைல் தூரம்) வரை, சிலோன் 'பாஸ்' வழங்கினர். நீராவி இன்ஜின் மூலம், 'போட்மெயில்' ரயில் இயக்கப்படும். புத்த மதத்தினருக்காக, தனி பெட்டி இருக்கும். அதில்,'ஆதஞீஞீடடிண்t ட்ணிணடுண் ணிணடூதூ' என, ஆங்கிலத்தி லும், 'புத்த துறவி மட்டும்' என, தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்.

பத்மநாமன், 79, சென்னை பெரம்பூர்

'பங்கா' வீசும் பணியாளர்கள்!

கடந்த, 1920ல் என் பெற்றோர், ஈரோடு அருகேயுள்ள கொடுமுடியில் இருந்து யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு என் தந்தை, ஹிந்து கல்லூரியில், முதல்வராக பணிபுரிந்தார். 1930ல் நான் பிறந்தேன். ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு, கொடுமுடி வருவோம். இதற்காக, கொழும்பில் இருந்து, 300 பேர் வரை பயணிக்கும் கப்பலில், தனுஷ்கோடி வருவோம். அங்கிருந்து, திருச்சிக்கு, 'போட் மெயில்' ரயிலில் பயணிப்போம். ரயிலில், மூன்று விதமான இருக்கை வசதிகள் இருக்கும். ரயிலில், முதல் வகுப்பில், மன்னர்களுக்கு சாமரம் வீசுவதுபோல, பணியாட்கள் வீசுவர். இதற்கு, 'பங்கா' என பெயர். அதுபோல, அங்கிருந்து வரும் போது, மண் கூஜாக்கள் அதிகளவு வாங்கி வருவர். ரயில் மற்றும் கப்பல் பயணத்திற்கு, ஒரே டிக்கெட் தான்.

அனந்தலட்சுமி, 83, 'போட் மெயில்' ரயிலில் பயணித்தவர், கோவை, போத்தனூர்

3 மொழிகளில் டிக்கெட்:

இலங்கை அரசில், 1946ல் 'ஸ்பெஷல் டூட்டி வாட்ச்மேன்' பணியில் சேர்ந்தேன்; மாதச்சம்பளம்,60 ரூபாய். 1963ல் ஓய்வு பெற்று, தமிழக அரசு மெரைன் பொதுப்பணி துறையில் சேர்ந்தேன். சென்னையில் இருந்து புறப்படும் 'போட் மெயில்' ரயிலில், 12 பெட்டிகள் இருக்கும். மண்டபம் முகாம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் இறக்கப்பட்டு, டாக்டர்களால் பரிசோதனை செய்யப்படுவர். ரயில் டிக்கெட்டில் தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகள் அச்சிடப்பட்டிருக்கும். மண்டபம் முகாமில் இருந்து, கொழும்பு வரை ரயில், கப்பல் பயணக் கட்டணம், 8.50 ரூபாய். மண்டபம் முகாமில் இருந்து, தனுஷ்கோடி ரயில் பயணம் ஒன்றரை மணி நேரம். தனுஷ்கோடியில் இருந்து புறப்படும் கப்பல், ஒன்றரை மணி நேரம் பயணித்து தலைமன்னாரை அடையும்.

ஆறுமுகம், 86, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், இலங்கை பென்ஷன்தாரர் சங்கத்தின் மண்டபம் முகாம் தலைவர்

Thanks to Dinamalar.com