மொத்தப் பக்கக்காட்சிகள்

2/06/2012

"காலார நடப்பது" நன்மைக்கே



அண்மைக்காலமாக நகர்ப்புற மக்களிடம் மட்டுமன்றி கிராமப்புற மக்களிடம்கூட ஒரு பழக்கம் பரவத் தொடங்கியிருக்கிறது. அது, "வாக்கிங்' எனப்படும் நடைப்பயிற்சிப் பழக்கம் பழக்கம்.

நம் முன்னோர்கள் நாள் முழுதும் பல்வேறு வேலைகளையும் அவர்கள் கையாலேயே நடத்தினர்.இதில்,ஆண்கள், பெண்கள் என்ற விதி விலக்கி ருந்ததில்லை. பெண்கள் கோலம் போடுதல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், துணிதுவைத்தல், கால் நடைகளைப் பராமரித்தல், சமைத்தல் என இயந்திரங்களின் உதவியின்றியே அனைத்துப் பணிகளையும் செய்தனர்.

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட ஆண்களும் முடிந்தவரை பணிகளுக்காக இயந்திரங்களைச் சார்ந்திருக்கவில்லை
.
ஆனால்,நடப்புலகிலோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.பெரும் பான்மையான மக்களிடம் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது. அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோரில் நூறு சதவிகிதம் பேருக்கும் உடல் உழைப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அவர்கள் அலுவலக நேரம்போக மீதிப் பொழுதுகளையும் அமர்ந்த படியேதான் கழிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். சும்மாயிருக்கும் பொழுதுகளே அதிகமாகிவிட்டதால் உடலில் பல்வேறு நோய்களின் ஆட்சிதான் நடக்கிறது.அவற்றைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளுடன் இப்படி காலார நடப்பதும் அவசியமாகிறது. ஆனால், அதையும்கூடப் பொருள்படுத்தாமல் சிலர், "நடப்பது நடக்கட்டும். நடப்பது நம்ம கையிலா இருக்கு?' எனக் கூறுவதைக் கேட்கலாம்.

வாய்வுப் பிடியில் சிக்கியவர்களுக்கு குனிதலோ,நிமிர்தலோ இயலாது. அதேபோலத்தான் வ(அ)சதியின் பிடியில் சிக்கியோரும்.அவர்களால் குனிந்து,நிமிர்ந்து வேலை பார்க்க இயலாமல் போகிறது. எதற்கெடுத்தாலும் பிறரைச் சார்ந்தே அவர்களின் பணி நடக்கிறது.இயற்கையான விஷயங்களைக் கைவிட்டு செயற்கைக்கு மாறுவதால்தான் நிலைமை "அன்ன நடை கற்கப்போய் தன் நடையும் இழந்தாற்போல்' ஆகிவிடுகிறது.
நடப்பது மிகவும் நல்ல பயிற்சிதான்.

 அதிகாலை மற்றும் அந்திப் பொழுதுகளில் நடப்பதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பல நன்மைகள் நடக்கின்றன.ஆயினும் அந்தியைவிட அதிகாலைப் பொழுதே சிறந்தது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பல்வேறு தொலைக்காட்சிகளின் நேரலைகளிலும் வரும் மருத்துவர்கள் முதல் நூற்றுக்கணக்கில் பீஸ் கொடுப்பதற்காக மணிக்கணக்கில் நாம் காத்துக் கிடந்து பார்க்கும் உள்ளூர் மருத்துவர்கள்வரை, நீரிழிவு உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கும் முதல்அறிவுரை காலார நடக்க வேண்டும் என்பதுதான்.

குறைந்த உழைப்பு, பெருங்குடலும் சிறுகுடலும் திணறத்திணற மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பாடு, இடையிடையே காபி, டீ, இத்யாதி பானங்கள், நொறுக்குத்தீனிகள் என சில காலம்வரை பொழுதுகள் சுகமாய் நடக்கின்றன. பின்னர், கொழுப்பு, சர்க்கரை, அழுத்தம் உள்ளிட்டவை கூடியும், குறைந்தும் போவதால் பல்வேறு சிறப்பு மருத்துவர்களைத் தேடி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

பத்து மாதம் ஆன பின்னும் நடக்காத தங்கள் குழந்தையை நடநட என பெற்றோர் உற்சாகப்படுத்துவர். ஆனால் அதே பெற்றோர், அக் குழந்தை மூன்று, நான்கு வயதை நெருங்கும்போதோ, "அங்க இங்க நடக்காம ஒரு இடத்தில உட்கார்' எனக் கண்டிப்பதையும் காணலாம்.

விளைவு, மாலை முழுதும் விளையாட்டு என்பதைக் கடைப்பிடித்து நடக்க வேண்டிய குழந்தை, அதைக் கைவிட்டு தொலைக்காட்சி முன்போ, கணினி முன்போ அமர்ந்து,அசையும் காட்சிகளை அசையாமல் பார்க்கத் தொடங்குகிறது.

இதனால், அவர்கள் வளர்ந்த பின்னர், "தெருமுனையிலிருக்கும் கடைக்கு ஒரு நடை சென்று வா'என்றால்கூட பெரும்பாலானோரின் கண்கள் முதலில் தேடுவது இரு சக்கர வாகன சாவியாகத்தானிருக்கும்.

தாத்தா,பாட்டிகள் சொன்னபடி நடப்பதைக் கைவிட்டு,அவர்களின் கைகளைப் பிடித்தபடி நடப்பதையும்கூட பழம் பேஷன் என இன்றைய தலைமுறை கேலி செய்யும் காலமாகிவிட்டது.

சாய்வு நாற்காலி,நொறுக்குத்தீனி சகிதமாய் குடும்பத் தலைவிகள் சீரியல்களில் நடப்பதையும், குடும்பத் தலைவர்கள் ஒருநாள் போட்டி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் கிரிக்கெட்டையும் மணிக்கணக்கிலோ,நாள்கணக்கிலோ பார்க்கப் பழகி விடுகின்றனர்.அவர்களைப் பார்த்துப் பழகும் குழந்தைகள் பிற்காலத்தில் அவர்களைப் போலத்தானே நடக்கும்?

கிராமப்புறங்களில் பல மைல் தொலைவு நடந்து தண்ணீர் பிடித்த காலங்கள் மலையேறிவிட்டன. நகர்ப்புறங்களிலும் அப்படித்தான். ஆனால் சில பகுதிகளில் குழாய்களில் வாரக்கணக்கில் தண்ணீர் வராதபோது, திடீரென லாரித் தண்ணீர் விநியோகிக்கப்படும்.

தண்ணீர் லாரி சப்தம் கேட்டதுமே, எல்லோருக்கும் முன்னதாகப் பிடிக்க வேண்டும் என்ற பரபரப்பில் ஆறேழு குடங்களை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு ஓட்ட நடையா,நடையோட்டமா என திகைக்க வைக்கும் விதத்தில் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெண்களுக்கும் (சில இடங்களில் ஆண்களுக்கும்) சிறிது நேரம் பரபரப்பாய் வேலை நடந்த திருப்தி.இப்படி வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பிடிப்பதால் உடற்பயிற்சிக் கூடத்துக்கென தனியாய் நடக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தான் பைக்கோ,காரோ வைத்திருப்பதற்காக,"ஒரு சைக்கிள்கூட இல்லையா,எங்க போனாலும் நடந்தா போறீங்க?'என பக்கத்து வீட்டுக்காரரை வேற்றுலக ஜந்துவைப் பார்ப்பதைப்போல ஏளனமாய் கேட்பதும்,பார்ப்பதும் சிலரது குணம்.ஆனால் அந்த நபர் பெருத்த தொந்தியைத் தூக்கிக்கொண்டு காலை,மாலை வேளைகளில் மூசுமூசென இறைத்தபடி நடக்க முடியாமல் நடந்துபோவதையும், நடக்கப்போவதையும் பார்க்க,எப்போதுமே நடந்துபோகும் பக்கத்து வீட்டுக்காரருக்கு பாவமாகத்தானிருக்கும்.

எது எப்படியோ, என்றும், எங்கும், எப்போதும் "நடப்பது' நன்மைக்கே என நினைத்தால் எல்லாம் நன்மையாகத்தான் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-மா. ஆறுமுக கண்ணன்
Source: Dinamani

நீங்கள் சாம்பியனாக..: வழிகாட்டும் விளையாட்டு பள்ளிகள்



வல்லரசாக வளர்ந்து வரும் பெரிய நாடு. 110 கோடி பேரைக் கொண்ட மனித வளம். அதிலும் பெரும்பான்மையோர் இளைஞர்கள். ஆனாலும் தகுதியில்லை ஏன்?

ஆம்! உலக கால்பந்து திருவிழாவில் பங்கேற்கக் கூட இந்தியா தகுதி பெற வில்லை என்பது வேதனைக்குரியது.

ஏன் இப்படி? ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிக்க முடியாத கேள்வி இது.
அரசியல்- எல்லாவற்றிலும் அரசியல், விளையாட்டிலும் அரசியல்- ஆதிக்க சக்திகளின் பிடியில் விளையாட்டுத் துறையும் சிக்கி,சீரழிந்து கொண்டிருக்கிறது
.
இந்த சக்திகளிடமிருந்து விளையாட்டை விடுவிக்க வேண்டுமானால் இளம் பருவத்திலேயே விளையாட்டில் ஆர்வம் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கிப் பெருக வேண்டும்.திறமையானவர்கள் ஏராளமாக வரும்போது தடைகள் தானாக விலகும்.

பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதற்கு மாறாக வாரிசுகளை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும், என்ஜினீயர் ஆக்கிவிட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். விளையாட்டு வீரராக்கிவிட வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்கள்?விளையாட்டுகளில் ஆர்வத்தைத் தூண்டிவிட பெற்றோர் மனது வைக்க வேண்டும்.பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

விளையாட்டில் ஆர்வமுள்ள சிறார்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய விளையாட்டு ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை,விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  (எஸ்.டி.ஏ.டி.) செயல்பட்டு வருகிறது.

வளரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு என, சென்னை மட்டு மல்லாமல் மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பள்ளிகள், விடுதிகளை நடத்தி வருகிறது இந்த ஆணையம் இந்த விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகளில் 7, 8, 9, 11-ம் வகுப்புகளில் சேர மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

சேர்வதற்கான தகுதிகள்: 7-ம் வகுப்பில் சேர 6-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 13 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 8-ம் வகுப்பில் சேர 7-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 14 வயதுக்குள் இருத்தல்வேண்டும். 9-ம் வகுப்பில் சேர 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 15 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 11-ம் வகுப்பில் சேர 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 18 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வுப் போட்டி: ஊராட்சி ஒன்றிய அளவு, மாவட்ட அளவு, மாநில அளவு என 3 கட்டமாக தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும். உயரமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உணவு, தங்குமிடம், விளையாட்டு சீருடை, விளையாட்டுப் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.கல்விக் கட்டணங்களை மாணாக்கரின் பெற்றோர் ஏற்கவேண்டும்.

மாணவர்களுக்கு விளையாட்டு விடுதி,பள்ளி அமைந்துள்ள இடங்கள்: திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சென்னை புதூர், கிருஷ்ணகிரி, சென்னை ரெட்ஹில்ஸ், நந்தன், நெய்வேலி.

மாணவிகளுக்கு...: ஈரோட்டில் விளையாட்டு விடுதி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு திண்டலில் பள்ளி.

அளிக்கப்படும் பயிற்சி: ஆண்களுக்கு தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, நீச்சல், கூடைப்பந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு சர்வதேச தரத்துடன் பயிற்சி அளிக்க ப்படுகிறது.

மாணவிகளுக்கு தட களம், வாலிபால், கால்பந்து, ஹேண்ட்பால், நீச்சல், வாள் சண்டை,கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறப்பான பயிற்சியை எஸ்.டி.ஏ.டி. பயிற்சியாளர்கள் அளித்து வருகின்றனர்.


தற்போது எஸ்.டி.ஏ.டி.யின் உறுப்பினர் செயலராக சத்யவிரத சாஹு ஐ.ஏ.எஸ். உள்ளார். எஸ்.டி.ஏ.டி. மூலம் மேலும் பலப்பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் பல புதுப்புது திட்டங்களையும் அவர் அறிவித்து வருகிறார்.

ஏழ்மை நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்  சர்வதேச அளவில் சாதனை படைப்பதற்காக பல்வேறு வசதிகளை செய்து தருகிறது எஸ்.டி.ஏ.டி.இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களை பட்டை தீட்டிக் கொண்டால்நீங்கள் சாதிக்கலாம் என்கிறார் உறுப்பினர்-செயலர் சத்யவிரத சாஹு.

கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்



கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது