மொத்தப் பக்கக்காட்சிகள்

7/17/2023

ஆண்களின் பிரச்னையை போக்கும் இந்தப் பழம் எங்கே கிடைக்கும்? என்ன விலை தெரியுமா?

பார்ப்பதற்கு திராட்சை பழம் போன்று இருக்கும் இந்த கனி ‘கேசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. புதர்ச் செடிகளில் விளையும் சிறு உருண்டை வடிவ கருநிறக் கனி வகையான இது பிரிட்டனில் அதிகம் சுவைக்கப்படுகிறது. உடல் நலத்திற்கு தேவையான பல்வேறு சத்துகளை கொண்டுள்ள இந்த பழம் தற்போது இந்திய சந்தைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கிறது.

ஆரஞ்சு பழத்தை விட இதில் வைட்டமின் சி சத்து நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் செல்களைப் பாதுகாக்க பயன்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் எனும் சத்தும் கேசிஸ் பழத்தில் நிறைந்துள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

எதிர்காலத்தில் சில வகை மருந்துகள் தயாரிப்பில் இந்த பழங்களில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் பயன்படுத்தப்படலாம். மனித மூளையின் செயல்பாடு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் உலர்த்தப்பட்ட கேசிஸ் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடி என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேசிஸ் பழத்தின் மருத்துவ பயன்கள்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு,ஆரஞ்சு பழத்தை விட கேசிஸ் கனியில் வைட்டமின் சி சத்து நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாலியல் பிரச்னைக்கு தீர்வா?

இந்த ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருக்க, கேசிஸ் பழம் தொடர்பான மற்றொரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டார் பிரிட்டனின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான எடின் காசிடி. பாலியல் புணர்வின் போது ஆண்குறி விரைப்புத்தன்மையில் சில ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு இயற்கை முறையிலான தீர்வு இந்த பழத்தில் உள்ளதா என்பதுதான் காசிடி மேற்கொண்ட ஆராய்ச்சி.

ஆண்குறி விரைப்புத்தன்மை இல்லாமல் போவதற்கு பெரும்பாலோருக்கு பிறப்பு உறுப்புக்கு சீரான அளவு இரத்த விநியோகம் இல்லாமல் போவதே காரணமாக உள்ளது. கேசிஸ் பழத்தில் உள்ள அந்தோசயினின்கள் (ஆன்ட் ஆக்ஸிடன்ட்களின் தொகுப்பு), ஃபிளாவனாய்டுகள் ஆகிய வேதிப் பொருட்கள் சில ஆண்களுக்கு உள்ள முக்கியமான இந்த பிரச்னையை போக்க வல்லது என்கிறார் பேராசிரியர் எடின் காசிடி.

“இந்த பழத்தை உட்கொள்பவரின் ரத்த நாளங்கள் சிறிதளவு திறக்கப்பட்டு ஆண்குறிக்கு செல்லும் இரத்த விநியோகம் மேம்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்கிறார் அவர்.

“இதுதொடர்பான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த பத்து ஆண்டுகளில் 25 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் கேசிஸ் பழத்தை வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உட்கொண்டவர்களுக்கு ஆண்குறி விரைப்பின்மை பிரச்னை, இந்தப் பழத்தை சுவைக்காதவர்களை ஒப்பிடும்போது 19 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது” என்கிறார் காசிடி.கேசிஸ் பழத்தின் மருத்துவ பயன்கள்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு,இதயத்தின் ஆரோக்கியத்திற்கும், அறிவுசார் திறனை மேம்படுத்தவும் இந்தப் பழம் பயன்படுகிறது

பிற மருத்துவ பயன்கள் என்ன?

உடம்பில் இரத்த விநியோகத்தை சீராக்குவதை தவிர, கேசிஸ் பழத்தில் உள்ள அந்தோசயினின்களால் வேறெந்த மருத்துவ பயன்கள் உள்ளன என்பது குறித்து கடந்த தசாப்தங்களில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

“மனித இதயத்தின் ஆரோக்கியத்திற்கும், அறிவுசார் திறனை மேம்படுத்துவதிலும் இந்த வேதிப்பொருட்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பார்க்கின்சன் நோய்க்கு ஆளானவர்களுக்கும் இந்த பழம் நன்மை பயக்கக் கூடியது” என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்கிறார் பேராசிரியர் எடின் காசிடி.

எடின் காசிடியை போலவே, சிசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மார்க் வில்லியம்ஸும், கேசிஸ் பழத்தின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக, உலர்நிலையில் இந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடியின் மருத்துவ பயன்கள் குறித்து ஆய்வு செய்தார்.

“சிறு சதைப்பற்றுள்ள விதைகளை உள்ளடக்கிய பிற கனிகளை ஒப்பிடும்போது கேசிஸ் பழத்தில் உடல் நலம் சார்ந்த நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதற்காக இதை சிறந்த உணவு வகை (சூப்பர் ஃபுட்) என்று சொல்லவில்லை. ஆனால் மற்ற விதைப் பழங்களை ஒப்பிடும்போது கேசிஸ் பழங்கள் சிறந்தவை” என்கிறார் வில்லியம்ஸ்.

“முதியவர்களுக்கு ஏற்படும் நரம்பு விரைத்தல் பிரச்னையை குறைப்பதற்கு இந்த கருநிற பழம் பயன்படுகிறது என்று ஜப்பானிய நிப்பான் விளையாட்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் மேற்கொள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்கிறார் அவர்.

ரத்த நாளங்கள் விறைத்து கடினமாகி போனால், அவை பெரிதாவதிலும், விரிவடைவதிலும் சிக்கல் ஏற்படும். இதன் விளைவாக உடலின் இரத்தம் அழுத்தம் பாதிக்கப்படும் என்கிறார் பேராசிரியர் வில்லியம்ஸ்.

கேசிஸ் பழத்தின் மருத்துவ பயன்கள் குறித்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, நரம்பு பிரச்னை கண்டறியப்பட்ட முதியவர்களுக்கு ஏழு நாட்கள் இந்த பழத்தின் சாறு கொடுக்கப்பட்டது. அதன் பயனாக அவர்களின் நரம்பு கடினமாகும் தன்மை குறைந்திருந்தது பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்ததாக கூறுகிறார் வில்லியம்ஸ்.

இந்த பழத்தின் கொட்டைகள் மலையேற்ற வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மற்றொரு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதேநேரம், நடைபயணம் அல்லது உடற்பயிற்சி மேற்கொண்ட பின் கேசிஸ் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடியை உட்கொண்டால், அதன் மூலம் தசைப் புண்கள் ஆறாது என்றும் கூறுகிறார் பேராசிரியர் வில்லியம்ஸ்.பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு,

 கேசிஸ் பழத்தின் கொட்டைகள் மலையேற்ற வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

Thanks to BBC NEWS

 https://www.bbc.com/tamil/articles/c513vgkx0e8o

7/13/2023

ரஜினி ஸ்டைல்!

 

தமிழகத்தில் கூலிங்கிளாஸ், ருத்ராட்சை விபூதி இவற்றின் விற்பனை அதிகமானதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று சில பேர் வேடிக்கையாக சொல்வார்கள்.
 
அது ஒருவகையில் மிகப் பெரிய உண்மையும் கூட...
 
அதுவரை பக்திப்படங்களில் மட்டும் தான் நடிகர்கள் விபூதிப்பட்டையுடன் தோன்றுவார்கள். 
 
அவற்றை எல்லாம் மாற்றி கமர்ஷியல் படங்களில் ஒரு கதாநாயகன்
ஒரு மாஸ் ஹீரோ விபூதிப்பட்டை, ருத்ராட்சையுடன் தோன்றியது இந்தியாவிலே ரஜினிகாந்த் ஒருவராகத் தான் இருக்க முடியும். 
 
அதுவும் திராவிடம் திராவிடம் என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில்...
தன்னுடைய படத்தில் தான் தோன்றும் முதல் காட்சி ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்;உற்சாகப்படுத்த வேண்டும் என்பதில் ரஜினி எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். 
 
அண்ணாமலை தொடங்கி தர்பார் வரை அது நிகழும் அதிசயத்தைப் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். 
 
அண்ணாமலை பாடல்பதிவின் போது 
 
"எந்த ஊர்ல சார் சைக்கிள்ல வர்ற பால்காரன் கேன்வாஸ் ஷூ போட்டுட்டு இருப்பான்?" என்று ரஜினியைக் கேட்டாராம் இசையமைப்பாளர் தேவா. அதற்கு அருகில் இருந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சிரித்துக் கொண்டே" பால்காரனா நடிப்பது சூப்பர் ஸ்டார் னா தாராளமா போடலாம் சார் "என்று ரஜினியை கை காட்டி சொன்னாராம்.
 
பால்காரன் (அண்ணாமலை) மட்டுமல்ல
 
கூலித் தொழிலாளி(மன்னன், உழைப்பாளி, பணக்காரன்) 
 
பட்டறையில் வேலை செய்பவர் (ஊர்க்காவலன்) 
 
குதிரை வண்டி ஓட்டுபவர் (முத்து) 
 
இவர்களெல்லாம் ஷூ போட ஆரம்பித்தது ரஜினிகாந்த் புண்ணியத்தில் தான்.
பனியன் போட்டு கொஞ்சம் சட்டையைத் திறந்து விட்டாற் போல் வருவது தான் ரஜினி ஸ்டைல். 
 
பெரும்பாலான கதைகள் உழைத்து முன்னேறும் பாத்திரங்கள் தான். அதற்கேற்றாற் போலவே கெட்டப்களில் நுணுக்கமாக சில விஷயங்களைச் செய்திருப்பார் ரஜினி. 
 
அந்த காலத்தில் எம்ஜிஆர் அவர்கள் ரிக்ஷாக்காரன், படகோட்டி படங்களில் போட்டு வந்த தனித்தன்மையான கெட்டப், உடைகள்  நிறைய ரிக்ஷா தொழிலாளிகளையும் படகோட்டிகளையும் மாற்றியது. 
 
விவசாயம் என்றாலே வேட்டி என்று இருந்த காலத்தில் தான் 'விவசாயி' என்று பேண்ட் சட்டை அணிந்து வந்து பாடினார் எம். ஜி.ஆர். டி ஷர்ட்கள் எம்ஜிஆர் காலத்தில் தான் பிரபலமானது. 
 
சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் ஒரே பாடலில் 12 உடைகள் அணிந்து வருவார். 
 
கூலிங்கிளாஸ் அதற்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி சில படங்களில் மட்டுமே அணிந்து நடித்திருப்பார்கள். கதாநாயகன் கண் தெரியாதவனாகவோ, மாறுவேடத்தில் வருபவனாகவோ இருந்தால் கூலிங்கிளாஸ் அல்லது ரீடிங் கிளாஸ் அணிந்து வருவார்கள்.
 
ஆனால் கூலிங்கிளாஸ் அணிவதை ஒரு ஸ்டைலாக ஒரு அழகாக மாற்றியவர் ரஜினிகாந்த். கூர்ந்து கவனித்தால் பல பாடல்களில் கூலிங்கிளாஸும்
காற்றில் பறக்கும் அவரது தலைமுடியுமே பாடலை வேறு ஒரு உயரத்துக்கு எடுத்து சென்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
 
"சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா" தொடங்கி "நான் தாண்டா இனிமேலு" வரை.
அவரைப் பார்த்து தான் எல்லா நாயகர்களும் இளைஞர்களும் பின்பற்றினார்கள். ஆனால் அவருக்கு இயற்கையாக கனகச்சிதமாகப் பொருந்தியது போல் மற்றவர்களுக்கு பொருந்தியதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கலைச்சேவை செய்யறேன், கஷ்டப்பட்டு நடிக்குறேன், கலையை உயர்த்த போறேன்னு லாம் சும்மா சொல்லிட்டு இருக்காம தன் ரசிகனுக்கு என்ன தேவை?
எதை மக்கள் ரசிப்பார்கள்? 
 
அவர்களை எப்படி சநதோஷப்படுத்துவது? 
 
என்று பார்த்து பார்த்து நடித்ததால் தான் அவர் சூப்பர் ஸ்டார். சும்மா வந்தது அல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்.

*எவர்க்ரீன் ஹீரோ MGR *...

மாட்டுக்கார வேலன் திரைப் படம் .
அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் .
சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி ,
ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....
" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ...
மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....
வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் ,
அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,
" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வயத்தை கழுவுரேன் .
அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்
எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...
" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க ,
எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .
" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்
" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே ,
தாய் ,
தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...
சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....
அவர் தானைய்யா..
எங்களின்
*எவர்க்ரீன் ஹீரோ*...
படித்தேன்
பிடித்தது

 

3/15/2023

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.
Kanchana (actress) - JungleKey.in Image #50
சென்னையில் நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில், வரும் 17.03.2023ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயம். இக்கோயிலுக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

அதே போல் தமிழகத்தின் தலைநகர் சென்னையின், வர்த்தகப் பகுதியான தி நகர், வெங்கட்நாராயணா சாலையிலும் ஒரு வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.

திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் கூட தி நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிப்பதுண்டு. திருப்பதியைப் போல் இங்கும் நாள்தோறும் கூட்டம் அலைமோதும். விசேஷ நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துச் செல்வதுண்டு. இவரை நினைத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா. 1960 - 70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர். திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருபவர். தற்போது இவருக்கு 84 வயதாகிறது.

இவர் திரைப்படங்களில் நடித்து சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் இவருடைய உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர்.

உறவினர்கள் ஏமாற்றி அபரித்துக்கொண்ட சொத்துக்களை மீட்க நீதிமன்றப் படியேறினார். அப்போது, தான் வழக்கில் ஜெயித்தால் அனைத்து சொத்துக்களையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக் கொண்டது போலவே, வழக்கில் வெற்றி பெற்று இழந்த சொத்துக்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார். அவர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டது போலவே சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததால், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.

நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம். இந்த இடத்தில் தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில், பத்மாவதித் தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது. ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரமாண்டமாகக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியானது திருப்பதி தேவஸ்தான விதிகளின் படி நடைகொடை பெறப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 22.02.2021அன்று, காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்று தாயார் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும்  17.03.2023 ஆம் தேதி பத்மாவதி தாயார் கோவிலுக்கு கும்பாபிஷேகம்.

கோயிலுக்கு சொந்தமாக புஷ்கரணி, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

9/18/2020

ஓட்டுநரின் சாமர்த்தியம்!

 ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார்.. இதைக் கண்ட ஓட்டுநர் மிகுந்த அக்கறையுடன் கேட்டார்..


" அய்யா.. இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே..?"

" அது இயலாது டாம்.. ஏகப்பட்ட பேர் காத்துக்கொண்டிருப்பார்கள்.. அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை..!"

இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை.. ஒரு யோசனை சொன்னார்..

" அய்யா.. ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே..? உங்கள் உரைகளை நிறைய கேட்டிருக்கிறேன்.. இன்று உங்களுக்கு பதிலாக, உங்களுடைய இடத்தில் நான் இருந்து உரையாற்றுகிறேனே..?'

ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. ஓட்டுநரின் தொப்பியை அணிந்துகொண்டு ஐன்ஸ்டீன் கடைசி இருக்கையில் அமர்ந்துகொள்ள, ஒட்டுநர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார்.. கூட்டத்துக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார் என்று தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்று நம்பிற்று. இருந்தாலும் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு பேராசிரியர் வடிவில் கிளம்பியது. அவர் ஒரு விடயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட கேள்வியாக கேட்டு விளக்கமளிக்க வேண்டினார்..திக்கு முக்காடிய ஓட்டுநர் சட்டென சுதாரித்து சொன்னார்..

" இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே.. இதற்கான விளக்கத்தை கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே கூட அளிக்க முடியும்..!"

மனதிற்குள் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்துகொண்டே ஐன்ஸ்டீன் எழுந்து சென்றார் விளக்கமளிக்க...!