மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

1996 ல் துக்ளக்கில் ரஜினி எழுதிய கட்டுரை


ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பண கஷ்டம் – அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை. சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழ முடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; ந...மக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்ககூடியவை. நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு, பணம் இருந்தால் என்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நாம் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம் தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள் தான் நமக்கு அதிக வேதனையை கொடுக்ககூடிய கஷ்டங்கள்.

பிரச்சனைகள் வரும்போது – அது பணப் பிரச்சனையோ, அல்லது மன நிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ – என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க, உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். அந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும். தவறு நம்முடையதாக இருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய்தாக இருந்தால், அதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல – ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டல், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்

ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில் தான் – மனதில் தான் இருக்கிறார். நான் எத்தனையோ வெளி நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால் தான் நம்முடைய தமிழ் நாட்டை ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று சொல்கிறார்கள்.

ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத்தன்மையும் இருந்தது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா – அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் இது உறுதி”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக