மொத்தப் பக்கக்காட்சிகள்

11/16/2011

செங்கல் சூளையில் வேலை பார்த்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்


தோன்றிப் புகழோடு தோன்றுக“ என்ற வள்ளுவரின் வாக்கியத்தை உண்மையாக்கும் விதமாக இடைப்பாடி அருகே உள்ள ஓர் குக்கிராமத்தில் பிறந்து தனது படிப்பு செலவிற்காக அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தபடி இடைப்பாடி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் கோவிந்தராஜூ.
 
தனது கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார்.
 
பிளஸ்2 பொது தேர்வில் 194.75 கட்டாப்மதிபெண் பெற்று மருத்துவ படிப்பிற்காக (எம்.பி.பி.எஸ்) தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் கோவிந்தராஜுக்கு இடம் கிடைத்துள்ளது .இந்த நிலையில் மேற்கொண்டு படிப்பதற்கு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் கோவிந்தராஜு கூறியதாவது:-
 
எனக்கு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு இடம் கிடைத்ததை மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதற்காக எனது ஆசிரியர்களுக்கும், கடவுளுக்கும் எனது பெற்றோர்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

இடைப்பாடி அருகே உள்ள மல்லிபாளையம் எனது சொந்த ஊர். எனது தந்தை சித்தையன், தாய் மாரியம்மாள் இருவரும் படிப்பறிவு இல்லாத சாதாரண விவசாய கூலிகள், இந்நிலையில் என்னையும் எனது சகோதரன் செல்வராஜையும் நன்றாக
படிக்க வைக்க எனது பெற்றோர்கள் கடினமாக உழைத்தனர்.

அவர்களின் வருமானம் போதாத நிலையில் எனது குடும்ப நிலையை உணர்ந்து அருகில் உள்ள செங்கல் சூளையில் காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் வேலை பார்த்தபடி படித்துவந்தேன்.

எனது படிப்பு ஆர்வத்தை பார்த்து இடைப்பாடி பகுதியில் சிறப்பு வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் பிரகாஷ் என்னை ஊக்கப்படுத்தினர். செங்கல் சூளையில் வேலைபார்த்து கொண்டே படிப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. இருந்த போதும்¢ எதிர்காலத்தில் வரும் நன்மையை மனதில் கொண்டு விடா முயற்சியுடன் படித்ததால் இன்று மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.
 
கடந்த கோடை விடுமுறையில் தினசரி பள்ளிப்பாளையத்தில் உள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்றதில் சேர்த்த பணம் ரூ. 7 ஆயிரம் மட்டும் வைத் துள்ளேன். இருந்தும் எப்படியும் சிறப்பாக மருத்துவ படிப்பை முடித்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து நீதிபதியானவரின் கதையை நினைவுபடுத்தும் கோவிந்தராஜு வின் தன்னம்பிக்கைக்கு வெற்றி கிடைத்து அவர் ஓர் சிறந்த மருத்துவராக வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக