மொத்தப் பக்கக்காட்சிகள்

11/05/2011

வேட்டை சிறுகதை



கிண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யகுமாருக்கு மகாபலிபுரம் சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் அறிவழகனின் வீட்டைக் கண்டுபிடிப்பதில்எவ்விதசிரமமும் இருக்கவில்லை.அதிரடியாய் வீட்டுக்குள் புகுந்தார்.அங்கிருந்த பீரோவை குடைந்து அதிலிருந்த ஒரு போட்டோவை எடுத்தார் .

"இந்தப் பெண்ணை எங்கேடா ஒளிச்சு வச்சிருக்கே நாயே?" இன்ஸ்பெக்டர் கேட்கவும், ஆடிப் போய்விட்டான் அறிவழகன்.

" அவங்க எங்கிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சார்".

"எ...ன்னது உனக்குத் தெரியாதா? அவ பக்கத்தில் இருக்கிறது நீதானே?"

"ஆ...ஆமாம். சார்"

'பின்னே தெரியாதுங்கறே! அவ யாருன்னு தெரியுமா? தீவிரவாதிங்க கும்பல்ல அவ ஒருத்தி.மூணு வருஷமா அவளைத் தேடிக்கிட்டிருக்கோம். அவளோட தலைக்குஅரசாங்கம் நிர்ணயிச்சிருக்கற விலை எவ்வளவு தெரியுமா?மூணு லட்சம்! மரியாதையா அவ இருக்கற இடத்தைக் காட்டிடு . இல்லே உனக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்தா நீ உண்மையை கக்குவேன்னு எனக்குத் தெரியும்டா ராஸ்கல்".

அதிர்ந்தான் அறிவழகன்.தீபா தீவிரவாதி கும்பலை சேர்ந்தவளா? தெரியாமல் போய்விட்டதே!

டூரிஸ்ட் பஸ்ஸில் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்தவளிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்துவிட்டு,அவள் புறப்படுகிற சமயத்தில் வழக்கமாக எல்லோரிடமும் கேட்பது போல கேட்டான். "உங்க ஞாபகமா உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கறேனே ப்ளீஸ்.."

அவள் சம்மதித்தாள்.அவனுடைய சகாவை விட்டு போட்டோ எடுக்க வைத்து,அவளுடைய அட்ரசையும் வாங்கிக் கொண்டு அனுப்பியது இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டிவிடும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

"சார்.. சார், உண்மையை சொல்லிடறேன் சார்," என்று கூறிவிட்டு, மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்ததிலிருந்து அவளோடு அவன் போட்டோ எடுத்துக் கொண்டது வரை விலாவாரியாக சொன்னான்.

"ம்... அப்ப நான் சொல்ற மாதிரி இந்த பேப்பரில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடு!".

"எனக்கும் இந்தப் போட்டோவில் இருக்கும் தீபாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. டூரிஸ்ட் கைடு என்ற முறையில் பக்கத்தில் நின்று நட்புடன் போட்டோ எடுத்துக்கொண்டதுதான் உண்மை."

--- அறிவழகன்.

என்று இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

"இந்த போட்டோவோட நெகடிவ் எங்கேடா வச்சிருக்கே?'--இன்ஸ்பெக்டர் அதட்டவும் பெட்டியில் பத்திரப்படுத்தியிருந்ததை எடுத்து பவ்யமாக நீட்டினான்.

கிண்டி போலீஸ் ஸ்டேஷன்.

"தீபா உங்கிட்டே என்ன சொன்னான் அந்தப் பொறுக்கி?அவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானே? இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே! உன்னோட படிக்கற பொண்னுங்ககிட்டேயும் சொல்லு" .

"இந்தாங்க சார் அந்தப் பையன் எழுதிக் கொடுத்த லெட்டரும் போட்டோவின் நெகட்டிவ்வும்"--தீபாவின் அப்பாவிடம் இரண்டையும் கொடுத்த இன்ஸ்பெக்டர் கடமை செய்துவிட்ட திருப்தியோடு அடுத்த வேலையைக் கவனிக்கப் புறப்பட்டார்.


( "பாக்யா" இதழில் வெளியான சிறுகதை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக