மொத்தப் பக்கக்காட்சிகள்

2/13/2013

மூணார் - பசுமைச்சொர்க்கத்தின் எழில்!

இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்’ கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது.
மூணார் புகைப்படங்கள் - அமைதியான எக்கோ பாயிண்ட் 

மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.

கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.


ஓய்வையும், இயற்கையின் அரவணைப்பையும் நாடி லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா மட்டும் தூரதேசங்களிலிருந்து மூணார் சுற்றுலாப்பிரதேசத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

புத்துணர்ச்சியூட்டும் எழில் பூமி

காலனிய காலத்திய மற்றும் கடந்த நூற்றாண்டுக்குரிய நவீன வரலாற்று பின்னணியை மூணார் பிரதேசம் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து பசுமை சமவெளிகளை நினைவூட்டும் இந்த மலைப்பிரதேச அழகு ஆங்கிலேயர்களுக்கும் வந்த நாளிலேயே பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் விரும்பிய இயற்கையின் தூய்மையும் இனிமையான சூழலும் இங்கு விரவியிருந்தது.


எனவே அவர்கள் படிப்படியாக இப்பிரதேசத்தை தென்னிந்தியாவை ஆண்ட (ஆங்கிலேய) அதிகார வர்க்கத்துக்கான ஒரு கோடை விடுமுறை வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டனர்.


அந்த துவக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று மூணார் பிரதேசமானது தனது பிரமிக்க வைக்கும் எழிற்காட்சிகளுடன் கூடிய ஒரு பிரசித்தமான விடுமுறை சுற்றுலா ஸ்தலமாகவே மாறிவிட்டது.

ஒரு இயற்கை ரசிகர் எதிர்பார்க்கும் யாவற்றையுமே தன்னுள் கொண்டிருப்பது இந்த மூணார் ஸ்தலத்தின் விசேஷமாகும். கொஞ்சமும் இடைவெளியின்றி நீண்டு பரந்து காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களும், பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், பலவகை தாவர உயிரின வகைகளும், காட்டுயிர் சரணாலயங்களும், நறுமணம் நிரம்பிய காற்றும் இனிமையான குளுமையான சூழலும் இங்கு பயணிகளை வரவேற்கின்றன.

கண்களை திறந்தாலே போதும் காணுமிடமெங்கும் இயற்கையின் வண்ணக்கோலம்!

ஒரு உற்சாகமூட்டும் குளுமையான சூழலில் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த ஸ்தலம் இருக்க முடியாது. மலைப்பாதை சைக்கிள் பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற பாதைகள் இங்கு ஏராளம் உள்ளன.


வெல்வெட் மெத்தைகள் போன்று பரந்து விரிந்துள்ள தேயிலைத்தோட்டங்கள் வழியே இங்கு பயணிகள் ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பலவிதமான அரிய பறவைகள் வசிப்பதால் இப்பகுதி பறவை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சியளிக்கும் மூணார் ஸ்தலமானது குடும்பச்சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குதூகலம் விரும்பும் குழந்தைகள், தேனிலவுப்பயணம் நாடும் தம்பதிகள், புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப்பயணிகள் மற்றும் தனிமை விரும்பும் ஒற்றைப்பயணிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது.

மலையேறிகள், சைக்கிள் பயணிகள் மற்றும் பிக்னிக் ரசிகர்களின் சொர்க்கம்


மூணார் மலைவாசஸ்தலத்தின் முக்கிய விசேஷங்களில் ‘இரவிக்குளம் நேஷனல் பார்க்’ எனப்படும் தேசிய இயற்கைப்பூங்காவும் ஒன்றாகும். இங்கு தமிழ்நாட்டின் அரசு விலங்கான ‘வரையாடு’ எனும் அரிய வகை ஆடு காணப்படுகிறது.


தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி’ இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம்.


இது தவிர, மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் ஒரு அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன. இந்த பால்பண்ணை இந்திய – ஸ்விஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும்.

மூணார் பகுதியில் ரம்மியமான இயற்கைச்சூழலின் பின்னணியில் அமைந்துள்ள நீர்விழ்ச்சிகளும் காணப்படுகின்றன. பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி, பவர்ஹவுஸ் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிற சின்னக்கனல் நீர்வீழ்ச்சி ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியமான அவசியம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகளாகும்.


ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் என்பது மற்றொரு முக்கியமான பார்த்து ரசிக்கவேண்டிய ஸ்தலமாகும். இங்குள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை அருங்காட்சியகத்தில் இப்பகுதியின் தேயிலைத்தயாரிப்பு மற்றும் வரலாற்று தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


பொத்தன்மேடு, ஆட்டுக்கல், ராஜமலா, எக்கோ பாயிண்ட், மீனுளி மற்றும் நாடுகாணி போன்ற இடங்களும் மூணார் பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.


மூணார் மலைப்பகுதி உற்சாகமூட்டும் பருவநிலையுடன் எந்த நாளிலும் விஜயம் செய்ய ஏற்றவாறு காணப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மிக எளிதாக இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.


எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் மூணார் மலைவாசஸ்தலம் வருவதற்கு ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகள் கிடைக்கின்றன. ஹோட்டல்கள், ரிசார்ட் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் தங்களுக்கு பொருத்தமானவற்றை பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Thanks to One India.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக