மொத்தப் பக்கக்காட்சிகள்

10/17/2025

ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார் !

 

1982 லேயே ரஜினிக்கு இந்தப் பாடலை எழுதியவர்  பஞ்சு அருணாச்சலம் தான்.. 
 அந்தப் பாடல் தான்  .............

 
"பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்"
 

இதுமட்டுமல்ல 1977ல் வெளிவந்த "புவனா ஒரு கேள்விக்குறி" தொடங்கி 1994ல் வெளிவந்த "வீரா" வரை ரஜினியின் பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் தான் என்பது பலரும் அறியாதது... தெளிவான பட்டியல் தயாரித்தால் இன்னும் நிறைய பாடல்கள் இடம்பெறும்.. உதாரணத்திற்காக சில மிக மிக பிரபலமான பாடல்கள் மட்டும்.
 
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
 
காதலின் தீபம் ஒன்று
 
விழியிலே மலர்ந்தது
 
ராஜா என்பார் மந்திரி என்பார்
 
பொதுவாக எம்மனசு தங்கம்
 
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
 
தென்மதுரை வைகைநதி
 
முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையும் தருக
 
மானின் இரு கண்கள் கொண்ட மானே
 
மாசி மாசம் ஆளான பொண்ணு
 
ஏய் பாடல் ஒன்று ராகம் ஒன்று
 
இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு. 
 
தனது நூலில் இளையராஜாவே சொன்னது தான்.. 
 
1984ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் இளையராஜா. ஊட்டியிலிருந்து "ரஜினி சார் கால்ஷீட் 2 நாள் இருக்கு. ராஜா சார்கிட்டேந்து 2 பாட்டு வாங்கி கொடுத்தீங்கன்னா ஷூட் பண்ணிரலாம்" என்று இயக்குனர் ராஜசேகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது பஞ்சு சாருக்கு..
இளையராஜாவை நேரில் சந்தித்து அவரது உடல் நலனை விசாரித்து விட்டு தயங்கி தயங்கி விஷயத்தை சொல்கிறார்... பாடினால் அடிவயிற்றிலிருந்து காற்று எடுக்க வேண்டி தையல் பிரிந்து விடும் என்பதால், விசிலடித்தே மெட்டை பாடிக்காட்டுகிறார் இளையராஜா. அங்கேயே பஞ்சு அருணாச்சலம் பாடலை எழுதி முடிக்கிறார்.. உடனே ஒளிப்பதிவு செய்யப்பட அந்தப் பாட்டு தான் 
 
"காதலின் தீபம் ஒன்று". அவசரமாக எழுதப்பட்ட பாடலாயிருந்தாலும்.. "என்னை நான் தேடித் தேடி, உன்னிடம் கண்டு கொண்டேன்" என்று ரம்மியமான வரிகளை எழுதி இருப்பார்.
 
காமம் என்பது திரைப்பாடல்களில் இலைமறைகாயாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் பஞ்சு சார்.. ஆனால் அதிலும் இலையுதிர்காலங்கள் நேர்ந்த பொழுதுகள் உண்டு..... அவரே
மஞ்சக் குளிக்கையிலே மதிலேறிப் பாத்த மச்சான் 
 
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தான்
 
மேயிற கோழியெல்லாம் பாயிறது சரியா
 
என்றெல்லாம் கூட எழுத வேண்டி வந்தது... இவை 
 
"சினிமா என்பது ஒரு வணிகம்.. அதில் நிறைய 
 
யோசிக்காதே" என்று கடந்து போக வேண்டுமோ 
 
என்று எண்ணத் தோன்றுகிறது.
 
உச்சகட்டமாக, கடல் மீன்கள் படத்தில் "மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல" என்று இவர் எழுதிய பாடல் கடும் எதிர்ப்புக்களை சம்பாதித்து பிறகு சென்சாரால் "மதனி என்பது மயிலே" என்றும் "கொழுந்தா என்பது குமரா" என்றும் திருத்தப்பட்டது..
 
இளையராஜா நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டது இவரது பாடல்களில் தான்... நானறிந்த சிலவற்றைச் சொல்கிறேன்
 
"புள்ளிபோட்ட லவுக்காரி புளியம்பூ சீலக்காரி" என்று உத்தமபாளையம் பகுதிகளில் வழங்கி வந்த நாட்டுப்பாடல் தான் "அன்னக்கிளி உன்னைத் தேடுது".. ராஜாவின் இசையில் வந்த இந்த முதல் பாடல்.
 
திரையிசையில் முதன் முதலாக "ரீதி கௌளை" ராகம் இடம்பெற்ற "சின்னக் கண்ணன் அழைக்கிறான்.
 
இளையராஜா இசையில் வெளிவந்த முதல் ராகமாலிகை, கவிக்குயில் படத்தில் இடம்பெற்ற 
 
"ஆயிரம் கோடி காலங்களாக" (மாயா மாளவகௌளை, வகுளாபரணம், வாகதீஸ்வரி, வலஜி, சக்ரவாகம், மோஹனம், மோஹன கல்யாணி, சாருகேசி என்று எட்டு ராகங்களில் அமைந்தது)
 
தமிழ் சினிமாவில் முதல் நேரடி சிலோன் பைலா பாடலான "சுராங்கனி சுராங்கனி"
நாட்டுப்புற மெட்டில் Western Harmony யை இணைத்து உருவான "ஏரியில எலந்தைமரம்"
முதன் முதலாக Stereophonic இசையில் உருவான 
 
ப்ரியா படத்தின் அனைத்து பாடல்களும்
Unconventional Rhythm Pattern ல் உருவான "குரு" படத்தின் "நான் வணங்குகிறேன்"
இசைக்கருவிகள் இல்லாமல் வெறும் குரல்களை மட்டும் வைத்து உருவான பாடலான "மாயா பஜார் 1995" படத்தின் "நான் பொறந்து வந்தது"
இரண்டு கால்களின் Jogging சப்தத்தை தபலா வாசிக்கும் கண்ணையா மற்றும் Percussionist ஜெய்சா ஆகியோரை தொடையில் தட்டி அதன்மூலம் உருவான "பருவமே புதிய பாடல் பாடு"
இந்தப் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் பஞ்சு சார் அவர்கள் தான்.. இதற்கு என் மனதில் தோன்றிய காரணம் "இந்தப் பையன் நல்லா தான்யா பண்ணுவான்" என்கிற எண்ணம் பஞ்சு சாருக்கும், தன்னை அறிமுகப்படுத்தியவர் என்பதைத் தாண்டி அதீதமாக எழுதுகிறேன் பேர்வழி என்று பாடலைக் காலி பண்ணி விட மாட்டார் என்று இளையராஜாவுக்கும் பரஸ்பர நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்..
 
நா.காமராசன் அவர்கள் சொன்னதைப் போல, கண்ணதாசன் தமிழுக்கு வழங்கிய கொடைகளில் முக்கியமான ஒன்று "பஞ்சு.அருணாசலம்".
நல்ல தயாரிபாளர் மட்டும் அல்ல..
நல்ல கவிஞர் & சினிமா  
ஆல் ரவுண்டர்!

9/06/2025

ஓய்வுபெற்றவரின் வாழ்க்கை நிலைமை!

 ஓய்வுபெற்றவரின் வாழ்க்கை நிலைமை!  

🌷🌻🤓🙏😚🌷😁🌹🤐😂  

*
1. ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்…  
மனைவி : இன்னுமா எழுந்திருக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கணுமா?  

🤓🤓🤓  

*

2. ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்…  
மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க  எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க!  

🤓🤓🤓  

*
* 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்
மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா  உட்கார்ந்தா எப்படி? , எப்பப் பாரு டீ  காபி..... ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம்தானே  ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது!  

🤓🤓🤓  

*

 4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித் திரிந்தால்…  
மனைவி : இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப 
கிடையாதே? இப்போவும் வீட்டிலேயே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல .....!  

🤓🤓🤓  

*
 5. ஓய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்…  
மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள்தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க.. . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் "ராம்ராம்", சங்கரா சங்கரா.... மாலை, மணி—அதே வேலை தானா!  

🤓🤓🤓  

*

6. ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்…  
மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஏன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக  காத்திருக்கிகணுமா  நாங்க?  

🤓🤓🤓🤓  

*
7. ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்…  
மனைவி : பக்கத்து வீட்டு மோகனப்பாருங்க.... ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்க, எப்பவும் என்னை கோவில் டூர், ஹரித்வாருக்குத்தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க!  

🤓🤓🤓🤓  

*

8. ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்…  
மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டி கிடக்குதோ? அந்த பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்... , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்....   

🤓🤓🤓  

*
*9. ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்…  
மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ.... ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க!  

🤓🤓🤓  

*

10. ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்து பேசினால்…  
மனைவி : எப்பவும் மொபைலும் கையுமா...... தான் பேச்சுப்பேச்சு.... ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்!  
🤓🤓🤓🤓
  
 11. ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் …  
மனைவி : இந்த வயசில என்ன அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில்  மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா?  

🤓🤓🤓  

*
 ஆஹா! ஓய்வு பெற்ற வாழ்க்கை!  
எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்குமான அன்பான அர்ப்பணிப்பு 💓💓  

✨😄 உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் அனுபவங்கள் தான்!

2/25/2025

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

 என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!



விரித்த படுக்கை விரிப்பில்
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன்!!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ?

மழலை மொழியில்
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில்
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை      அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி
அலைபேசியில் விசாரிப்பு.

நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

யாரோ  ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையை ரசித்து அனுப வியுங்கள்!

 


 

2/20/2025

நாகேஷ் !

 எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!


திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்! 


நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!


`அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!


இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர். டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.


பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

12/06/2024

எம்.ஜி.ஆரிடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கம். ஏவிஎம் சரவணன் !

 

சிலர், ஒருசிலரிடமிருந்து எதாவது ஒரு நல்ல பழக்கத்தை வாழ்க்கையில் கற்றுக்கொள்வார்கள் .... இப்படித்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட நல்ல பழக்கம் குறித்து ஏவிஎம் சரவணன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில்....

'அன்பே வா ' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையான காலை 11 மணி அளவில் ஒரு மெல்லிய பசி இருக்கும். அந்த வேளையில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும், டீ மற்றும் வடை கொடுப்பது வழக்கம். நாங்கள் அதை ‘குரங்கு டிபன்’ என்போம். அன்றும் அப்படித்தான் கொடுக்கப்பட்டது. அப்போது என் அருகில் இருந்த எம்.ஜி.ஆர்., ‘சரவணன்.. நீங்க வடையை உங்கள் ரூம்ல வச்சி சாப்பிடுங்க’ என்றார்.

நான் என்ன ஏதென்று புரியாமல், ‘என்ன சார்.. என்னாச்சி?’ என்றேன்.

‘ஒரு பொருளை எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடணும். இல்லையென்றால் தனியாக வைத்து சாப்பிட வேண்டும்’ என்றார்

.

நானோ, ‘இல்லை சார். எல்லோருக்கும் கொடுத்தாச்சே..’ என்றேன்.

எம்.ஜி.ஆர். மேலே கையைக் காட்டினார். அங்கு ஒரு லைட்மேன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘அவருக்கு நீங்க டீ, வடை கொடுக்கலை’ என்றார்.

எல்லாருக்கும் கொடுத்தாச்சான்னு பார்த்துட்டு சாப்பிடணும் என்று எம்.ஜி.ஆர். சொன்ன அந்த வார்த்தை, இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் வெளியில் செல்வதற்காக புறப்படும்போது, என்னுடைய டிரைவரிடம் கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கச் சொல்வேன். அந்தப் பழக்கம் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வந்தது என தெரிவித்தார்..