மொத்தப் பக்கக்காட்சிகள்

2/12/2013

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு

"கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.
தங்கவேலுவின் சொந்த ஊர் காரைக்கால். 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கி, பல நாடகக் கம்பெனிகளில் நடித்த பின்பு என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் நடித்தார். இவர் நடித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த "சதிலீலாவதி". அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் "பணம்" என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். "சிங்காரி" என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி கூறி நடித்ததால் டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்டார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "அமரகவி"யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.
 
800 படங்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். "சக்ரவர்த்தி திருமகள்", "உத்தமபுத்திரன்", "குலேபகாவலி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "கற்புக்கரசி", "மங்கையர் திலகம்", "அமரதீபம்", "கல்யாண பரிசு", "எங்கவீட்டு பிள்ளை" உள்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.

டூப் மாஸ்டர்

குறிப்பாக, "கல்யாணப்பரிசு" படத்தில் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார். தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்தால், அதில் "கல்யாணப்பரிசு" தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.

நாடகக்குழு

சொந்த நாடகக்குழுவின் மூலம் "மனைவியின் மாங்கல்யம்", "விமலா", "பம்பாய் மெயில்", "லட்சுமிகாந்தன்" உள்பட பல நாடகங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த நாடகம் கோவை ஒண்டிப்புதூரில் நடைபெற்ற "சத்தசுவரங்கள்" என்ற நாடகம்.

தி.மு.க. மாநாட்டில் 

1994-ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பிறகு 25-9-1994 அன்று சிறந்த நாடக நடிகர்-நடிகைகளுக்கு மைலாப்பூர் அகாடமி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

தூக்கத்திலேயே மரணம்

தங்கவேலு சென்னை தியாகராயநகரில் உள்ள ராஜாபாதர் தெருவில் வசித்து வந்தார். 27-9-1994 அன்று இரவு 8 மணி வரை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கைக்கு சென்றார். நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து சிறிது நேரம் விழித்திருந்து விட்டு மீண்டும் உறங்கச் சென்றார். 
அதிகாலையில் (28-ந்தேதி) 6 மணி அளவில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 77.

கருணாநிதி இரங்கல்

தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் சென்று தங்கவேலு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அறிவிக்கப்பட்டது. தங்கவேலு மறைவையொட்டி தி.மு.கழக தலைவர் கருணாநிதி விடுத்த அனுதாப செய்தியில் கூறி இருந்ததாவது:-

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக கலைவாணர் மறைந்த பிறகு அவர் வகித்த கலை உலகின் இடத்தை நிறைவு செய்து கொண்டிருந்த நகைச்சுவை வேந்தராக, கழகத்தின் மீதும், கழக முன்னணியினர் மீதும் எந்த நிலையிலும் நீங்காத பற்றுடையவராகவும் திகழ்ந்த தங்கவேலு அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து போனேன்.

ஜுலை 29, 30, 31-ல் மதுரையில் நடைபெற்ற கழக மாநாட்டில் கலந்து கொண்டு இரு நாட்களும் தங்கியிருந்து, மாநாட்டில் அவர் ஆற்றிய உரையையும் அந்த உரையில் இருந்த உறுதியையும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் என்னுடன் கலந்து கொண்டு உணர்ச்சி மேலிட அவர் பேசியதையும் எப்படி மறக்க முடியும். 

அவரது இழப்பால் கலையுலகம் மட்டுமல்ல. கழகமும் பெருந்துயருக்கு உள்ளாகியிருக்கிறது. நானோ மனம் மிகவும் நொந்து போயிருக்கிறேன். மறைந்த தங்கவேல் அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கும், குறிப்பாக அவரது துணைவியார் சரோஜாவுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறி இருந்தார்.

குடும்பம்

தங்கவேலுவின் முதல் மனைவி பெயர் ராஜாமணி அம்மாள். அவருக்கு 2 மகள்கள். 2-வது மனைவி நடிகை எம்.சரோஜா. அவருக்கு ஒரே மகள். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது

Thanks to Malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக