மொத்தப் பக்கக்காட்சிகள்

9/06/2025

ஓய்வுபெற்றவரின் வாழ்க்கை நிலைமை!

 ஓய்வுபெற்றவரின் வாழ்க்கை நிலைமை!  

🌷🌻🤓🙏😚🌷😁🌹🤐😂  

*
1. ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்…  
மனைவி : இன்னுமா எழுந்திருக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கணுமா?  

🤓🤓🤓  

*

2. ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்…  
மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க  எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க!  

🤓🤓🤓  

*
* 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்
மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா  உட்கார்ந்தா எப்படி? , எப்பப் பாரு டீ  காபி..... ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம்தானே  ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது!  

🤓🤓🤓  

*

 4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித் திரிந்தால்…  
மனைவி : இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப 
கிடையாதே? இப்போவும் வீட்டிலேயே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல .....!  

🤓🤓🤓  

*
 5. ஓய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்…  
மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள்தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க.. . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் "ராம்ராம்", சங்கரா சங்கரா.... மாலை, மணி—அதே வேலை தானா!  

🤓🤓🤓  

*

6. ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்…  
மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஏன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக  காத்திருக்கிகணுமா  நாங்க?  

🤓🤓🤓🤓  

*
7. ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்…  
மனைவி : பக்கத்து வீட்டு மோகனப்பாருங்க.... ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்க, எப்பவும் என்னை கோவில் டூர், ஹரித்வாருக்குத்தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க!  

🤓🤓🤓🤓  

*

8. ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்…  
மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டி கிடக்குதோ? அந்த பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்... , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்....   

🤓🤓🤓  

*
*9. ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்…  
மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ.... ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க!  

🤓🤓🤓  

*

10. ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்து பேசினால்…  
மனைவி : எப்பவும் மொபைலும் கையுமா...... தான் பேச்சுப்பேச்சு.... ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்!  
🤓🤓🤓🤓
  
 11. ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் …  
மனைவி : இந்த வயசில என்ன அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில்  மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா?  

🤓🤓🤓  

*
 ஆஹா! ஓய்வு பெற்ற வாழ்க்கை!  
எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்குமான அன்பான அர்ப்பணிப்பு 💓💓  

✨😄 உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் அனுபவங்கள் தான்!

2/25/2025

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

 என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!



விரித்த படுக்கை விரிப்பில்
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன்!!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ?

மழலை மொழியில்
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில்
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை      அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி
அலைபேசியில் விசாரிப்பு.

நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

யாரோ  ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையை ரசித்து அனுப வியுங்கள்!

 


 

2/20/2025

நாகேஷ் !

 எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!


திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்! 


நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!


`அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!


இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர். டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.


பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

12/06/2024

எம்.ஜி.ஆரிடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கம். ஏவிஎம் சரவணன் !

 

சிலர், ஒருசிலரிடமிருந்து எதாவது ஒரு நல்ல பழக்கத்தை வாழ்க்கையில் கற்றுக்கொள்வார்கள் .... இப்படித்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட நல்ல பழக்கம் குறித்து ஏவிஎம் சரவணன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில்....

'அன்பே வா ' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையான காலை 11 மணி அளவில் ஒரு மெல்லிய பசி இருக்கும். அந்த வேளையில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும், டீ மற்றும் வடை கொடுப்பது வழக்கம். நாங்கள் அதை ‘குரங்கு டிபன்’ என்போம். அன்றும் அப்படித்தான் கொடுக்கப்பட்டது. அப்போது என் அருகில் இருந்த எம்.ஜி.ஆர்., ‘சரவணன்.. நீங்க வடையை உங்கள் ரூம்ல வச்சி சாப்பிடுங்க’ என்றார்.

நான் என்ன ஏதென்று புரியாமல், ‘என்ன சார்.. என்னாச்சி?’ என்றேன்.

‘ஒரு பொருளை எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடணும். இல்லையென்றால் தனியாக வைத்து சாப்பிட வேண்டும்’ என்றார்

.

நானோ, ‘இல்லை சார். எல்லோருக்கும் கொடுத்தாச்சே..’ என்றேன்.

எம்.ஜி.ஆர். மேலே கையைக் காட்டினார். அங்கு ஒரு லைட்மேன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘அவருக்கு நீங்க டீ, வடை கொடுக்கலை’ என்றார்.

எல்லாருக்கும் கொடுத்தாச்சான்னு பார்த்துட்டு சாப்பிடணும் என்று எம்.ஜி.ஆர். சொன்ன அந்த வார்த்தை, இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் வெளியில் செல்வதற்காக புறப்படும்போது, என்னுடைய டிரைவரிடம் கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கச் சொல்வேன். அந்தப் பழக்கம் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வந்தது என தெரிவித்தார்..

மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் !

 

முப்பது வயதாகியும் திருமணத்திற்கு வரன் கிடைக்காத என் நண்பனுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்கள்.

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து அவனை சென்னையில் பார்க்கும் பொழுது புலம்பித் தள்ளி விட்டான். அவன் மனைவி அவனை விட ஒரு வருடம் பெரிய பெண்ணாம், இவன் கோதுமை நிறம் அவன் மனைவி மாநிறத்திற்கும் சற்று கம்மி.

ச்சே.. எல்லாம் இந்த ஜாதகம் ஜோசியம் இதனால வந்தது.. எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குறதுனால வேற எந்த பொண்ணும் கிடைக்கல..

"சரி விடுடா.. ரிலாக்ஸா மேரேஜ் லைப்பை ஓட்ட பாரு.." என்றேன். என்னால் வேறு என்ன சொல்ல முடியும்.

மூன்று மாதங்களுக்கு பிறகு அவனை சந்திக்க குடும்பத்துடன் சைதாபேட்டையில் இருந்த அவனுடைய அபார்ட்மெண்ட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி இருவருக்குள் செல்ல சீண்டல்கள் போன்ற அன்னியோன்யம் தெரிந்தது. என் மனைவியும் அவனுடைய மனைவியும் சேர்ந்து சமையல் வேலை செய்து கொண்டிருக்க, என் மகன் டிவி பார்த்து கொண்டிருந்தான், நானும் அவனும் சில பொருட்களை வாங்க அருகிலிருந்த கடைக்கு சென்றோம்.

என்னடா மச்சான்.. அன்னைக்கு பிடிக்கல'ன்னு சொன்ன.. இப்ப பார்த்தா அப்படி தெரியலையே..

நிஜம் தான்'டா..

பிறகு அவனே வாய் திறந்தான். திருமணத்திற்கு பின் மூன்று மாதங்கள் ஆன பிறகும் கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை. இருவருக்குள்ளும் 'ஆம்' 'இல்லை' என்று ஒரு வார்த்தை பதிலுடனே வாழ்க்கை சென்று கொண்டிருந்திருக்கிறது.

இவர்கள் போர்ஷனுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டி இதை கவனித்திருக்கிறார். ஒரு நாள் இவன் மனைவியிடம் விசாரிக்க, அவனுடைய மனைவியும் "அவரு விலகி போனா நான் என்ன செய்யுறது?.." என்று அழுது கொண்டே கூறியிருக்கிறார்.

அந்த பாட்டிக்கு இவனை, இவனுக்கு திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே தெரியும் என்பதால் இவனை அழைத்து "ஏன்டா.. பொண்டாட்டியை வெளிய கூட்டிகிட்டு போறது தான?.." என்று கூறியிருக்கிறார்.

இவன் அதற்கு "இந்த வாரம் ஞாயித்துக் கிழமை மாயாஜால் அழைச்சுக்கிட்டு போறேன்.." என்று கூறியிருக்கிறான்.

அந்த பாட்டி அதற்கு இவனை கபாலீஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து சில நாட்களுக்கு செல்லும்படி கூறி, அவருக்கு தெரிந்த அர்ச்சகர் மூலமாக சில பூஜைகளையும் புக் செய்து கொடுத்திருக்கிறார். அதுவும் அவருடைய சொந்த செலவில். அந்த பாட்டி தான் இவர்கள் இருக்கும் போர்ஷனின் உரிமையாளர் என்பதால் இவனால் மறுக்க முடியவில்லை.

சரிடா.. அதுக்கும் உன் மனசு மாறுனதுக்கும் என்னடா சம்பந்தம்..

இல்லடா.. தொடர்ந்து மூனு ஞாயித்து கிழமை அங்க போனோம்.. ஒரு பொண்ணு அவ்வளவு லட்சணமா இருந்தா, ஆனா கோவில் வாசல்'ல முட்டி போட்டு கண்ணை மூடிக்கிட்டு மடிப்பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தா.. அவளுக்கு பக்கத்துல அவளோட புருஷன் கைக்குழந்தையோட நிக்குறான்.. பார்த்தாலே கொஞ்சம் வசதியானவங்க தான்னு தெரியுது.. அந்த பொண்ணு ரெண்டு கையில பிடிச்சிக்கிட்டு இருக்குற புடவை முந்தானையில சில்லறை காசுங்களும் அஞ்சு பத்து ரூபா நோட்டெல்லாம் இருந்தது.. இவங்களுக்கும் ஏதோ பிரச்சினை இருக்குன்னு தான அர்த்தம்.. அங்க நாங்க போகும் போது நிறைய கல்யாணம் நடந்துகிட்டு இருக்கும்.. ஒன்னு மாப்பிள்ளை சுமாரா இருப்பான் பொண்ணு சூப்பரா இருக்கும்.. பொண்ணு சுமாரா இருந்தா மாப்பிள்ளை நல்லா இருக்கான்.. அதுவும் இல்லாம பொண்ணுங்களை புடைவையில பார்க்கும் போது ஏதோ ஒரு நிறைவா இருக்குடா.. என் மனைவி கூட இந்த நைட்டி குர்தா எல்லாத்தையும் விட புடவையில உறுத்தாத அழகோட இருக்காங்க.. என்னமோ அப்படியே எல்லாம் மாறி போயிடுச்சு..

கடையிலிருந்து அவனுடைய வீட்டிற்கு திரும்பி சென்றவுடன் நான் நேராக அந்த பாட்டியின் வீட்டிற்கு சென்றேன். எனக்கும் அந்த பாட்டியை ஓரளவிற்கு தெரியும்.

சிறிது நேர பேச்சுக்கு பின் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன். "இப்படி பண்ணா மனசு மாறிடுவான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?.." என்றேன். அதற்கு அந்த பாட்டியின் கணவர் தன் நடுங்கும் குரலில் "கண்ணை மூடி சாமி கும்பிடும் போது நம்ம மனைவி ரொம்ப லட்சணமா தெரிவாங்க'ப்பா.." என்றார் கிண்டலாக.

சும்மா சொல்லாதீங்க..

அந்த பாட்டி உடனே "மாலுக்கு தியேட்டருக்கு எல்லாம் போனா, ஆம்பளை ஒன்னு செலவை பத்தி கவலைப்படுவான்.. இல்லைன்னா அடுத்தவன் பொண்டாட்டியை பார்த்து வயித்தெரிச்சல் படுவான்.." என்றார். மேலும் "அதே அடிக்கடி கோவிலுக்கு போய் பாரு.. அங்க வர்ற பெரும்பாலான தம்பதிகள் அழகா இருந்தாலும் சரி, சொத்து சுகம் இருந்தாலும் சரி, இங்க பிரச்சினை இல்லாத மனுஷங்களே இல்லைன்னு புரியும்.. அதுமட்டுமில்லாம வெயில் நேரத்துல பொண்ணுங்க புடவை கட்டிக்கிட்டு பளிச்சுன்னு முகம் தெரிய கூட வரும் போது, எல்லா ஆம்பளைங்களுக்கும் அவங்க மனைவியை ரொம்ப பிடிக்கும்.." என்றார்.

அந்த குறும்புக்கார தாத்தா கிண்டலாக "ஈவ்னிங் கற்பூர வெளிச்சத்துல அம்மனை தரிசிச்சிட்டு அப்படியே திரும்பி அந்த மங்கலான கருவறை வெளிச்சத்துல, உன் பக்கத்துல நிக்குற மனைவியை பாரு.. ரெண்டு முகமும் ஒரே மாதிரி தெரியும்.." என்றார்.

என் நண்பனும் 2015-இல் வீட்டை காலி செய்து கொண்டு ஊரப்பாக்கம் சென்றுவிட்டான். என் நண்பனுக்கு இப்பொழுது ஆறாவது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்த பாட்டியும் தாத்தாவும் ஒருவரை தொடர்ந்து இன்னொருவர் காலஞ்சென்று நான்கு ஆண்டுகளாகின்றது.

ஆனால் இப்பொழுது அவர்களை பற்றி நினைத்தாலும் என் நண்பன் கண் கலங்குவான். அந்த தாத்தா இவனிடம் அடிக்கடி கூறுவாராம் "உனக்கான வீட்டுத் தெய்வம் உன் மனைவி தான்.. அவ நியாயமான விஷயங்களுக்கு அழுதா உனக்கு வாழ்க்கையில நிம்மதியும் ஏற்றமும் இருக்காது.." என்பாராம்.

அந்த பாட்டி அவனுடைய மனைவியிடம் "வீட்டு ஆம்பளைக்கு நம்மள விட்டா வேற யாரும்மா இருக்கா.. எல்லா பொண்டாட்டிகளுக்குமே அவங்க புருஷன் தான முதல் குழந்தை.." என்பாராம்.